Sunday, December 26, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 23


23. ஒரு கடிதமும் பதிலும்

உயர்திரு கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு; தாங்கள் எழுதிய “கீதையில் மனித மனம்” படித்தபின் என் மனத்தின் ஓலத்தைத் தந்திருக்கிறேன்.
எண்ணங்கள் அலைமோதுகின்றன. அலைகள் சீர்படவில்லை, கரையை உடைத்து நிலத்தைச் சிதைக்குமோ என்ற பயம். நெஞ்சம் விம்மிப் புடைத்துத்தணியும் பெருமூச்சின் உஷணத்தின் அளவைக் கலோரியில் கணக்கிட்டாலும், அது வரும். வெந்து நொந்து போன இதயத்தின் நிலையைக் கணக்கிடவோ, ஆற்றவோ என்றோ ஒரு நாள் உண்டு என்ற ஆணித்தரமான நினைவுகள் தான் நிம்மதியைத் தருகின்றன. இது எத்தனையோ ஞானிகள் போல், வேதாந்தத்தையோ, வாழ்க்கையின் தத்துவத்தையோ உணர்ந்த நிலை அல்ல. இதுதான் உண்மை நிலை என்று எண்ணும் சாசுவதமான பலம் கிட்டாதவரை, சுய பலத்தில் வாழ விழைகிறேன். கடவுளே, எனது பார்வையில் தெளிவையும் காலில் வலுவையும் கொடு என்று உன்னை நாடுகிறேன்.
‘பிறப்பு, தகப்பன் அளிப்பது; இறப்பு ஆண்வன் அழைப்பது; இரண்டுக்கும் இடைபட்டது, அரிதாரம் பூசப்படாத நடிப்பு என்னும் வாழ்க்கை!’ எத்தனை அழகான உருவகம் தந்திருக்கிறீர்கள். இந்த நடிப்பில் நவரசம், அந்த நடிப்பில் சோகரசம்; அந்த நடிப்பில் ஆர்வமான நடிப்பு; அபசுரமான பாடல்கள்; ஒரே சத்தம்; ஆரவாரம்; காதே செவிடுபடும் அதிர்வுகள்; சுற்றும் சுழல்கள்; செருகும் நிலைய் கண்கள்; சுவாசம் சீரான நிலை தவறும் தருணம்;ந்ந எங்கோ லேசாகிப் பறக்கும் கும்மென்ற இனந்தெரியாத பரபரப்பு; உடம்பெல்லாம் பஞ்சாகி, வெது வெதுப்பாகி நீறாகிக் கரைந்து போகும் நிலை. ஒரே வெளிச்சம் …பின் ஒரே இருட்டு….. இருட்டு… இருட்டு…….. மையிருட்டு! எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று தெரியாத இருள்… வாழ்க்கைப் பயணம் ஒரு நிலை கடக்கும் விந்தைகள், ‘who are you?’ இந்தக் கேள்வியை எத்தனைமுறை என்னுள் கேட்டுக் கொண்டாலும் பதிலே இல்லை. ‘What is the purpose of God in creations?” இந்தக் கேள்வியும் பதிலும் புரியாத தத்துவமே என எண்ணுகிறேன்.
எனக்கு நன்றாகத்தெரியும் வாழ்க்கை மிகமிகச் சிறியது என்று. அதை முழுவதுமாக ரசித்துச்சுவைக்கப் போகிறேன். இந்த உடம்பு எத்தனை நாட்கள் தாங்கப் போகிறது? எல்லாம் அவன் இட்ட கட்டளைகள். அவன் போட்ட கட்டளைப்படி பிறந்த நாம், நமக்குள் ஏற்படுத்திக் கொள்வது பட்டுப்பாடுன்ற பிதற்றல்; கடமை என்ற அபத்தம்; கண்ணியம் என்ற ஊர் ஏமாற்று வேலை. இவை எல்லாம் நம்மில் கூட்டம் சேர்ந்து விட்டதால், நம்மை வகைப்படுத்திக் கொள்ளப் பயத்தினால் போட்டு கொண்ட தற்காப்புகள் என்கிறது தற்கால ஹிப்பியிஆம்? எல்லாவற்றையும் நேசி; அன்பாயிரு; உலக இன்பங்களை எல்லாம் தெவிட்டச் சுவை என்கிறது. இதற்குத் தங்கள் பதில் என்ன?
என்னால் என் மனத்தை ஒருமைப்படுத்திக் கொள்ள முடியும். இந்த வரியை எழுதுவதறகு எத்தனை துணிச்சல் இருந்தால் இப்படி எழுதியிருப்பேன் என்று யூகிக்கலாம். ஆனால் இதில் ஏற்படும் போட்டாப்போட்டியில் வென்றவனையும் தோற்றவனையும் காண்பது கடினம். நான் வாளாவருந்துவிட்டால், என்னைச்சுற்றியுள்ள ஆரவாரம் பரபரக்கிறது. என் உணவைத் திருட வேறு ஒருவன் மறைந்து பார்கிறான். ஒருவன் திருடுகிறான், ஒருவன் அனுபவிக்கிறான். எல்லோரும் சேர்ந்து,’ஏமாந்தவன்’ என்று எனக்குப்பட்டமளிக்கிறார்கள். பலர் சந்தர்ப்பவாதிகளாவே சௌபாக்கியமாய் இருக்கின்றனர். சிலர் என்னைப் பைத்தியக்காரன் என்றே நம்புகின்றனர்.
என் மனத்தை வலிமைப்படுத்த நான் உணர்ச்சி வசப்படுவதில்லை. கோப்ப்படுவதில்லை. என்னால் முடிந்த வரை தர்ம்ம் செய்கிறேன். முடியாவிட்டால் இரக்கப்படுகிறேன். என்னைப் பார்த்து ஒருவன் பொறாமை கொள்ளாத அளவு இருக்கப் பழகிக்கொள்கிறேன்.
தனிமையில் கடவுளையே நினைக்கிறேன். ஒவ்வொரு கணமும், இப்போதைய வாழ்க்கையையும் போதுமான வசதிகளையும் கொடுத்தனைக்குக் கடவுளுகு நன்றி சொல்கிறேன். நான் ஒரே வார்த்தையில் பரம ஆத்திகன். படித்துக்கொண்டிருக்கும் மாணவனானாலும் தற்கால நாகரிகதின் நடைக்கேற்ற வேகத்தில் செல்லவொட்டாத என் பொருளாதார நிலையில், நான் அணியும் உடையில் கூட எனக்கு நிறைவு உண்டு. தனித்தவனாக இருப்பதும், பிறர் என்னைத்தனித்துப் பார்ப்பது கூட என்னில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியதில்லை. எனது மனத்துணிவிற்கும் தன்னம்பிக்கையின் வலுவிற்கும் சான்றுகள் இல்லை.
இயலாமை காரணமாக நான் இப்படியெல்லாம் இருக்கிறேன் என்பது உண்மை. எனினும், இதிலும் நிறைவு காணும் மனது எனக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பலவற்றை இயலாமை காரணமாக விட்டுக் கொடுக்கும் போது ‘தியாகம்’ என்ற பெரிய வார்த்தையைப் போட்டு, அதற்குப் பக்கத்தில் ஒளிந்து கொண்டு மனம் வெம்பியே இருப்பவன், மனிதருள் சோடை போனவன் என்பது என் கருத்து, முழுவதுமாப் பற்றற்ற வாழ்க்கையையா வலியுறுத்துகிறது இந்து மதம்.
அப்படி அனைவரும் பற்றற்றுப் போய்விட்டால் ரிசர்வ பாங்க் அச்சடிப்பதை நிறுத்த நேரிடும்; லோ ராஜ்ய சபாக்கள் பஜனை தனக்களாகும்ந்ந தொழிற்கூடங்கள் பர்ண சாலைகளாகும். நான் வாழும் காலம், பெட்ரோல் புகையும் பேரிரைச்சலும் உள்ள, அவசரமான, ஆபத்தான, குறுகிய வாழ்க்கை. மதங்கள் அவனவனுக்குத் தன் நிலையையும், தனது பாரம்பரியத்தையும் Origin உணர்த்த பல சந்தர்ப்பங்களை, பல சடங்குகள் வாயிலாகத்தருகிறது. புத்தரின் போதனையில் கூடத் தலையாயது மனவடக்கம் தானே?
மனம் ஒருமைப்பட்டால்சிந்தனைகள் சீராகும். சிந்தனைகள் சீர்பட்டால் செயல்கள் செவ்வனே நடக்கும்.
சிந்தனையும் செயலும் ஒருமித்தால் நியாயம் அநியாயங்கள் தெளிவாகும். அத்தெளிவு உண்டானால் மன அமைதிஉண்டாகும். நமக்குத் தற்போது அந்த அமைதிதான் தேவை. விவேகமற்றவன் சிந்திப்பதில்லை; விவேகமுள்ளவன் மனப் பகுவம் அடைகிறான், இரண்டிற்கும் இடைப்பட்டவன் வாலிபால் பந்துபோல் அலைக்கழிக்கப்படுகிறான். அந்த மென்மையான இன்பமான, மன அமைதியும் நிறைவும் பெறக் கீதை போன்ற இந்து மதத்தின் ஆணி வேரனைய பொக்கிஷங்கள், தற்கால நிலையில் ஒரு சாரசரி நிலையாளன் கடைப்பிடக்கும்படி என்ன சொல்கிறது என்பதையும் இதில் இந்து மதத்தின் தனித்துவம் பற்றியும் தங்களை எழுத வேண்டுகிறேன்.
தங்கள் அன்பன்,

எஸ். வெங்கட்ராம்ன்

கோயமுத்தூர் -9
அன்புள்ள நண்பரே!
உங்கள் எண்ணம் எனக்குப் புரிகிறது.
உங்கள் மனத்தின் கோலங்களை எனக்கு விளங்கும்படியே வரைந்திருக்கிறீர்கள்.
மனிதனின் மனத்துக்கு முதல் தேவை, அமைதியும், நிம்மதியுமே!
எந்தெந்த வழிகளில் அவை உங்களுக்கு கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான வழிகளில் அவை உங்களுக்குக்கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான வழிகளின் மூலம் அவை கிடைக்கப் போவதில்லை.
காமுகனோ, கொலைகாரனோ, சூதாடியோ, பிறர் மனை நயந்து செல்லும் பேதையோ, ஏமாற்றுக்காரனோ, பிற நிரந்தரமான நிம்மதியை அடைவதில்லை.
ஆகவே, நிரந்தரமான நிம்மதிக்காகப் பிறர் வெறுக்காத நல்ல வழிகளைத்தான் நீங்கள் நாடமுடியும்.
அந்த வழி எதுவானாலும், அதை நீங்கள் தேர்தெடுத்துக் கொள்வதை இந்து மதம் தடுக்கவில்லை.
நீங்கள் சொல்வதுபோல், பற்றற்ற வாழ்க்கையை மட்டும் இந்து மதம் போதித்தால், ரிசர்வ் பாங்க் அச்சடிப்பதை நிறுத்த வேண்டும். லோக் சபையும் மக்கள் சபையும் பஜனை மடங்கள் ஆகும் என்பதையும் நான ஒப்புக்கொள்கிறேன்.
இந்துமதம் லௌகீக வாழ்க்கையை வற்புறுத்துகிறது என்பதுதான், இதுவரை நான் எழுதி வந்திருக்கும் தொடர் கட்டுரையின் சாரமாகும்.
மனதுக்கு நிம்மதி என்பது பந்த பாசங்களை அறுத்து விடுவதால் மட்டுமே கிடைக்கும் என்று நான் வாதாட வரவில்லை.
கீதையைக் கண்ணன் உபதேசித்தது அர்ஜூனனுக்கு.
ஆகவே பந்த பாசத்தை அறுப்பது என்பது கீதையின் முழு நோக்கமாக இருக்க முடியாது.
காரணம், அர்ஜூனன் பந்த பாசங்களுக்கு கட்டுப்பட்டவன்.
காதல் உணர்ச்சி மிகுதியும் உள்ளவன்.
போர் என்று வந்தபின் உறவு பார்க்கக்கூடாது என்றுதான் கண்ணன் வாதாடுகிறான்.
அர்ஜூனன் ஆத்மராகம் சஞ்சலிப்பதைத்தான் நிறுத்த முயல்கிறான்.,
தியானத்தால் மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்றுதான் கூறுகிறான்.
யாரையும் சந்நியாசியாகப் போகச் சொல்வது இந்து மதத்தின் நோக்கமல்ல.
வாழ்வைக்கண்டு பயந்தவர்கள், நொந்தவர்கள், லௌகீ வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கண்டவர்கள், பற்றற்ற வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள இந்து மதம் அனுமதிக்கிறது.
ஆனால், லௌகீக வாழ்க்கையிலே சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து மனநிம்மதியைப் பெறக்கூடியவர்களை அது தடுக்கவில்லை.
அதை ஊக்கப்படுத்துகிறது என்ற கூடச் சொல்ல்லாம்.
உங்களுடைய சலனம் “லௌகீக வாழ்க்கையில் மன நிம்மதியைப் பெறுவது எப்படி?” என்பதே.
நீங்கள் எவ்வளவு விவேகமுள்ளவராக இருந்தாலும் அந்த நிம்மதிக்கு இடையூறு எப்போதாவது வந்து சேருகிறது.
அது உங்கள் தலையெழுத்தைப் பொறுத்தது.
ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவளோடு நிம்மதியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்தத் தேர்விலேயே விதி உங்களை வென்று விடக்கூடும்.
நீங்கள் எண்ணியது போன்ற மனைவியாக அவர் இல்லாமற் போய்விடக்கூடும். நிம்மதியை அழிக்கும் சக்தியாக ஆகிவிடக்கூடும்.
வாழ்க்கைக்குப்பொருள் வேண்டுமே என்று நீங்கள் தொடங்குகிற வாணிபன், ஒரு கட்டத்தில் வீழ்ச்சியுற்று, உங்கள் நிம்மதியை அழித்துவிடவும் கூடும்.
உங்கள் நண்பர்கள் நன்றி கெட்டவர்களாகி, உங்கள் நிம்மதியைக் கொன்றுவிடவும் கூடும்.
அதுவே லௌகீக வாழ்க்கைக்கு மன நிம்மதியை வேண்டுபவன், முதலில் அந்த மனதை எந்த அதிர்ச்சியையும் தாங்கக் கூடியதாகப் பக்குவம் செய்து கொள்ள வேண்டும்.
லௌகீக வாழ்க்கையில் மனதைக் கெடுப்பதற்குத் தான் ஏராளமான வழிகள் உள்ளன் என்பதையும், முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.
எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.
முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் கவலைப்பட்டேன்.
நிம்மதி இழுந்தேன்.
பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.
‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்பு என்ற பழமொழிபடி கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.
நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.
ஆயிரம் வராதா என்று அமைதி இழந்து கேட்டது மனது; அதுவும் வந்தது.
அது லட்சம் வரை போயிற்று; அப்போதும் நிம்மதி இல்லை.
வந்த ஏதும் தங்கவில்லை.
‘செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.
பொருளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘வருவதும் வரும், போவது போகும்’ என்று சமநோக்குமுடிவு கொண்டேன், அந்த வகையில் நிம்மதி வந்தது.
ஆனால், லௌகீக வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது, ஒருதுன்பமும் கூட வருகிறதே. என்ன செய்ய?
பேதலித்த மனத்தைப் பார்த்து, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று அழுதேன்.
‘இரண்டு மனம் வேண்டும் ‘ என்று இறைவனைக் கேட்டேன்.
உபதேசத்தில் இறங்கியிருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.
பகவத் கீதையின் தியானயோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.
என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி, சாகப்போகும் பிணங்கள் கதறி அழப்போகின்றன.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யரோ?.
-ஆம்; கதை ஒருநாள் முடியப்போகிறது.
சிலர் அழுது முடிக்கப்போகிறார்கள்!
பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள்!
காந்தியையும் நேருவையும் மறந்துவிட்ட ஜனங்கள் என்னையா நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்?
-இப்படி நினைப்பேன்.
‘போனால் போகட்டும் போடா! வாழ்க்கையை அனுபவித்துச்சாவோம்!” என்று முடிவு கட்டுவேன்.
ஒரு நாள் மயங்கிக் கிடப்பேன். மறுநாள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும்.
உடனே அந்தப் பயத்தை மாற்றிக்கொள்வேன்.
ஆகவே, லௌகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே மனநிம்மதியைப் பெற எண்ணினால் தினசரி வருகின்ற இடையூறுகளைக் களைந்து கொண்டே இருக்க வேண்டும்.. இடையூறுகள் வந்தே தீரும்; அவற்றுக்குப் பயப்படக்கூடாது.
“எல்லாம் கண்ணனின் கட்டளை என்று சிரித்துக்கொடே அப்புறப்படுத்திவிட வேண்டும்.
இப்படி ஓராண்டுக்குச்செய்து பாருங்கள். பிறகு உள்ளம் மரத்துப்போகும்; ஈட்டி வந்து குத்தினாலும் வலிக்காது. முள்ளின் மீது உட்கார்ந்து கொண்டு ரோஜாப் பூவைப் பற்றிப் பாடுகின்ற சக்தி வந்துவிடும்.
நமது பிறப்பு கண்ணனின் விளையாட்டு என்ற ஞானம் வந்துவிடும்.
மற்றவர்களெல்லாம் சிறியவர்களாகவும் நாம் கொஞ்சம் பெரியவர்களாகவும் நமக்கே தோன்றும்.
அடிக்கடி பகவத்கீதை படியுங்கள்; பிறகு நீங்களே உங்கள் மனதைச் சோதித்துப் பாருங்கள்; தேறிவரும்.
எனக்கும் தேறி வருகிறது.

நன்றி :- கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment