Thursday, December 30, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011




மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,  
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்;



இவையனைத்தும் அனைவரும் பெற்று 

வாழ்வில் வெற்றி காண எனது மனமார்ந்த 

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.









Sunday, December 26, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 24

24. பாவிகளே பிராத்தியுங்கள்
(இது எல்லாப் பாவிகளுக்கும் அல்ல; அப்பாவிகளுக்கும் மட்டும்!)
எங்கள் இறைவா!

மூல முதல்வனே!
அகல் விளக்குகள் ஒளிவிடும் உன் சந்நிதியில் நாங்கள் மண்டியிடுகிறோம்.

தாழ்ந்து கிடந்த எங்கள் கரங்கள் மேலெழுகின்றன.
இருகை கூப்பி வணங்குகிறோம்.
கூப்பிய கரங்களுக்குள் எந்த ஆயுதமும் மறைத்து வைக்கப்படவில்லை என்று கூறுகிறோம்.
சலனமற்ற கண்களையும், சபலமற்ற உள்ளத்தையும் எங்களுக்குக் கொடு.
கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துவிடு.
சூன்யத்தில் பிறந்த இதயம் வளர வளரக் காட்சிக்கு வருவது நியதி. ஆனால் எங்கள் இதயம் வளரவில்லை.
அது வளர்ச்சிக்குப் பிறகும் சூன்யமாகவே இருந்தது.
கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல் ஆன்மீக உணர்ச்சியை மறந்துவிட்ட நாங்கள் பாபத்தில் சிக்கினோம்.
அறிந்தோ, அறியாமலோ செய்த எங்கள் குற்றங்களை ஆதி நாயகனே மன்னித்துவிடு.
நாங்கள் அமுதென்று எண்ணி, நஞ்சை அருந்தினோம்.
மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம்.
எங்கள் கடிவாளம் ஆசையின் கையிலிருந்ததால் எங்கள் பயணத்தையும் ஆன்மா நடத்த முடியவில்லை.
ஆசை அழைத்த வழி சென்றோம்; தண்டனை கிடைத்த பிறகுதான் தவறுகளை உணர்ந்தோம்.
மலத்திலே கால் வைத்தபோது, அது மலமென்று எங்களுக்குத் தெரியவில்லை.
கையினால் தொட்டுப் பார்த்தபோதும் கண்டு கொள்ள முடியவில்லை.
மூன்றாவது, மூக்கிலே வைத்தபோதுதான் முழுதும் புரிந்தது.
இவை ஒரு முட்டாள் செய்யும் காரியங்களல்ல.
நாங்கள் நடந்து சென்ற இருட்காட்டில் எங்கள் அறிவுச் சுடர் எரியவில்லை.
காற்றை மட்டுமே நம்பிப்போகும் பாய்மரப் படகுபோல், அசையை மட்டுமே நம்பி எங்கள் வாழ்க்கைப் படகு போய்விட்டது.
நாங்கள் பிறர் மனை நயந்திருந்தால் அது எங்கள் பெண்ணாசையின் குற்றம்.
நாங்கள் பிறர் பொருள் விழைந்திருந்தால் அது எங்கள் பொன்னாசையின் குற்றம்.
நாங்கள் பிறர் நிலம் கவர்ந்திருந்தால் அது எங்கள் மண்ணாசையின் குற்றம்.
ஆசைகளை சிருஷ்டித்து, அந்த விளையாட்டில் எங்களைச் சிக்க வைத்து, வேடிக்கை பார்த்த எங்கள் பரம்பொருளே!
நிலைக்கும் என்று நாங்கள் எண்ணியவையெல்லாம் நிலையாதனவென்று இப்போது அறிந்தோம்.
மரத்திலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகள், பசுமை இலைகளைப் பார்த்து ஏங்குவது போல்,பாவிகளாகிய நாங்கள் உத்தமமான ஞானிகளைப் பார்த்து, அப்படியே நாமும் வாழக்கூடாதா என்று ஏங்குகிறோம்.
அந்த வாழ்க்கையை, ஏ, ஹரிஹரனே எங்களுக்கு அருள்வாயாக!
சமைக்கப்பட்ட சேவல் கூவ முடியாதென்பது எங்களுக்குத் தெரியும்.
முழுக்க தன்னைத் அழித்துக்கொண்டுவிட்ட மனிதன் உன்னை வேண்ட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் முழுக்க எங்களை அழித்துக்கொள்ள வில்லை.
பாதி வழியிலேயே எங்களுக்குக் கண் திறந்துவிட்டது.
எங்கள் இறகுகள் தான் பறிக்கப்பட்டிருகின்றன.
நாங்கள் கொல்லப்படவும் இல்லை.சமைக்கப்படவுமில்லை.
இந்த நிலையில் ஏ,ஏசுநாதா!
எங்கள் இறகுகள் மறுபடியும் வளர அனுமதி.
கண்ணென்பது நல்லவற்றைக் காணுவதற்காகவும், செவி என்பது நன்மொழிகளைக் கேட்பதற்காகவும், நாசி என்பது நறுமணங்களை நுகர்வதற்காகவும் , வாய் என்பது நல்ல சேதிகளைச் சொல்வதற்காகவும், கை என்பது உதவி பெறத் தகுதியுள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும், கால் என்பது நல்லோரை நோக்கி நடப்பதற்காகவும் என்பதை நாங்கள் அறியாமற் போனோம்.
இந்த அங்கங்களில் ஒன்று அறியாமல் பிழை செய்திருந்தால் ஏ, ஆனந்த மூர்த்தியே! அந்த அங்கங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடு.
‘தீர்க்கப்பட முடியாத நோய் எங்களுக்கு வராதவாறு, திருத்தாண்டவ மூர்த்தியே, எங்களுக்கு அருள் செய்!
மீன், பூச்சியைத் தின்பது பசியால்.
அந்த மீனை நாரை கொத்துவது பசியால்.
அந்த மனிதன் தவறுகள் செய்வதும் பசியால்.
எங்கள் தவறுகளுக்குப் பசி மட்டுமே காரணமாக இருந்தால், உடனடியாக மன்னித்துவிடு.
இந்த ஆசைக்கு அறியாமையே காரணம் என்றால் அந்த அறிவை நாங்கள் அடையாதவாறு தடுத்தது நீதான் என்பதால், நாங்கள் நிம்மதியாக வாழ உடனே அனுமதித்துவிடு.
பலாப்பழத்தில், சுளையைத் தேடி எடுக்க ஒரு கத்தி தேவைப்படுவது போல், லௌகீக வாழ்க்கையில் நியாயத்தைக் கண்டுகொள்ளப் புத்தி தேவைப்படுகிறது.
அந்தப் புத்தி எங்களுக்கு இல்லாமற் போய் விட்டது என்பதைச்சொல்லிக் கொள்ள,நாங்கள் வெட்கப்படவில்லை.
‘ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதைக் கண்டு கொள்ளும்போது, அறிவாளியாகி விடுகிறான். என்பது முன்னோர் வாக்கு.
நாங்கள் கண்டுகொண்டுவிட்டோம்.
பரம்பொருளின் சந்நிதானத்தில் எங்கள் பாபங்களைக் கழுவிவிட்டு, நிம்மதியை வாங்கிப்போக வந்திருக்கிறோம்.
இறைவா!
உன் சந்நியதியில் கற்பூரம் ஏற்றப்படுகிறது!
உனக்குச் செய்யப்படும் நெய் வேத்தியத்தில் வாழைப்பழமும் தேங்காயும் வைக்கப்படுகின்றன.
இவை ஏன் என்பதை, இப்போதுதான் நாங்கள் அறிந்துகொண்டோம்.
கற்பூரம் தன்னை அழித்துக்கொள்கிறது.
அது எரிந்து முடிந்த பிற்பாடு ஒரு கரித்தூள் கூட மிஞ்சுவதில்லை. வாழை மட்டை, தண்டு, இலை, பூ, காய், பழம் அனைத்தையும் தந்து உதவுகிறது.
தென்னைமரம் கீற்று, இளநீர், தேங்காய் அனைத்தையும் தந்து உதவுகிறது.
இவற்றில் எந்தப் பாகமும் வீணாவதில்லை.
மனிதனும் அப்படி உலகிற்குப் பயன்பட வேண்டும் என்ற இந்துக்களின் அசையையே இது குறிக்கிறது.
நாங்களோ மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம்; நாங்கள் பயன்படவில்லை.
எங்கள் கண்கள் திறந்துவிட்டன்.
நாங்கள் இனி எந்தச் சேவையைச்செய்ய வேண்டுமென்று நீ கனவில் வந்து கட்டளையிடுகிறாயோ, அந்தச் சேவையைச் செய்யக் காத்திருக்கிறோம்.
எங்கள் கனவில் உன்னை எதிர்பார்க்கிறோம்.
லௌகீக வாழ்க்கையாக எவருக்கும் வேதனை இல்லாமல் வேடிக்கையாக நடத்தலாம்’ என்று முதலுதாரணம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா!
‘லௌகீக வாழ்க்கையில் சில சட்டதிட்ட வரம்புகள் இருந்தால் காலங் கடந்தாவது வெற்றி வரும்’ என்று நிரூபித்த ஸ்ரீராமர்!
‘ஒழுக்கம் மிகுந்த பக்திக்கு உருவகம் கொடுத்த முருகா!’
‘இவை மூன்றிலும் எதை நீ தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் நானுனக்குத் துணை நிற்பேன் என்று உறுதி கூறும் சிவபெருமானே!’
‘அந்த நால்வர் வழியில் ஒன்றைப் பின்பற்றும் முன்பு, அந்த வழியில் தொல்லையில்லாமலிருக்க அனுமதி வழங்கும், விநாயக்ப் பெருமானே!
இந்துக்களின் பல தெய்வ வணக்கங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவை என்பதை நாங்கள் கண்டு கொண்டுவிட்டோம்.
எங்கள் பாவங்களை இங்கே சமர்ப்பிக்கிறோம். மன்னிப்பை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் ஒன்று முற்றும்..


நன்றி :- கவியரசு கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம் I - 23


23. ஒரு கடிதமும் பதிலும்

உயர்திரு கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு; தாங்கள் எழுதிய “கீதையில் மனித மனம்” படித்தபின் என் மனத்தின் ஓலத்தைத் தந்திருக்கிறேன்.
எண்ணங்கள் அலைமோதுகின்றன. அலைகள் சீர்படவில்லை, கரையை உடைத்து நிலத்தைச் சிதைக்குமோ என்ற பயம். நெஞ்சம் விம்மிப் புடைத்துத்தணியும் பெருமூச்சின் உஷணத்தின் அளவைக் கலோரியில் கணக்கிட்டாலும், அது வரும். வெந்து நொந்து போன இதயத்தின் நிலையைக் கணக்கிடவோ, ஆற்றவோ என்றோ ஒரு நாள் உண்டு என்ற ஆணித்தரமான நினைவுகள் தான் நிம்மதியைத் தருகின்றன. இது எத்தனையோ ஞானிகள் போல், வேதாந்தத்தையோ, வாழ்க்கையின் தத்துவத்தையோ உணர்ந்த நிலை அல்ல. இதுதான் உண்மை நிலை என்று எண்ணும் சாசுவதமான பலம் கிட்டாதவரை, சுய பலத்தில் வாழ விழைகிறேன். கடவுளே, எனது பார்வையில் தெளிவையும் காலில் வலுவையும் கொடு என்று உன்னை நாடுகிறேன்.
‘பிறப்பு, தகப்பன் அளிப்பது; இறப்பு ஆண்வன் அழைப்பது; இரண்டுக்கும் இடைபட்டது, அரிதாரம் பூசப்படாத நடிப்பு என்னும் வாழ்க்கை!’ எத்தனை அழகான உருவகம் தந்திருக்கிறீர்கள். இந்த நடிப்பில் நவரசம், அந்த நடிப்பில் சோகரசம்; அந்த நடிப்பில் ஆர்வமான நடிப்பு; அபசுரமான பாடல்கள்; ஒரே சத்தம்; ஆரவாரம்; காதே செவிடுபடும் அதிர்வுகள்; சுற்றும் சுழல்கள்; செருகும் நிலைய் கண்கள்; சுவாசம் சீரான நிலை தவறும் தருணம்;ந்ந எங்கோ லேசாகிப் பறக்கும் கும்மென்ற இனந்தெரியாத பரபரப்பு; உடம்பெல்லாம் பஞ்சாகி, வெது வெதுப்பாகி நீறாகிக் கரைந்து போகும் நிலை. ஒரே வெளிச்சம் …பின் ஒரே இருட்டு….. இருட்டு… இருட்டு…….. மையிருட்டு! எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று தெரியாத இருள்… வாழ்க்கைப் பயணம் ஒரு நிலை கடக்கும் விந்தைகள், ‘who are you?’ இந்தக் கேள்வியை எத்தனைமுறை என்னுள் கேட்டுக் கொண்டாலும் பதிலே இல்லை. ‘What is the purpose of God in creations?” இந்தக் கேள்வியும் பதிலும் புரியாத தத்துவமே என எண்ணுகிறேன்.
எனக்கு நன்றாகத்தெரியும் வாழ்க்கை மிகமிகச் சிறியது என்று. அதை முழுவதுமாக ரசித்துச்சுவைக்கப் போகிறேன். இந்த உடம்பு எத்தனை நாட்கள் தாங்கப் போகிறது? எல்லாம் அவன் இட்ட கட்டளைகள். அவன் போட்ட கட்டளைப்படி பிறந்த நாம், நமக்குள் ஏற்படுத்திக் கொள்வது பட்டுப்பாடுன்ற பிதற்றல்; கடமை என்ற அபத்தம்; கண்ணியம் என்ற ஊர் ஏமாற்று வேலை. இவை எல்லாம் நம்மில் கூட்டம் சேர்ந்து விட்டதால், நம்மை வகைப்படுத்திக் கொள்ளப் பயத்தினால் போட்டு கொண்ட தற்காப்புகள் என்கிறது தற்கால ஹிப்பியிஆம்? எல்லாவற்றையும் நேசி; அன்பாயிரு; உலக இன்பங்களை எல்லாம் தெவிட்டச் சுவை என்கிறது. இதற்குத் தங்கள் பதில் என்ன?
என்னால் என் மனத்தை ஒருமைப்படுத்திக் கொள்ள முடியும். இந்த வரியை எழுதுவதறகு எத்தனை துணிச்சல் இருந்தால் இப்படி எழுதியிருப்பேன் என்று யூகிக்கலாம். ஆனால் இதில் ஏற்படும் போட்டாப்போட்டியில் வென்றவனையும் தோற்றவனையும் காண்பது கடினம். நான் வாளாவருந்துவிட்டால், என்னைச்சுற்றியுள்ள ஆரவாரம் பரபரக்கிறது. என் உணவைத் திருட வேறு ஒருவன் மறைந்து பார்கிறான். ஒருவன் திருடுகிறான், ஒருவன் அனுபவிக்கிறான். எல்லோரும் சேர்ந்து,’ஏமாந்தவன்’ என்று எனக்குப்பட்டமளிக்கிறார்கள். பலர் சந்தர்ப்பவாதிகளாவே சௌபாக்கியமாய் இருக்கின்றனர். சிலர் என்னைப் பைத்தியக்காரன் என்றே நம்புகின்றனர்.
என் மனத்தை வலிமைப்படுத்த நான் உணர்ச்சி வசப்படுவதில்லை. கோப்ப்படுவதில்லை. என்னால் முடிந்த வரை தர்ம்ம் செய்கிறேன். முடியாவிட்டால் இரக்கப்படுகிறேன். என்னைப் பார்த்து ஒருவன் பொறாமை கொள்ளாத அளவு இருக்கப் பழகிக்கொள்கிறேன்.
தனிமையில் கடவுளையே நினைக்கிறேன். ஒவ்வொரு கணமும், இப்போதைய வாழ்க்கையையும் போதுமான வசதிகளையும் கொடுத்தனைக்குக் கடவுளுகு நன்றி சொல்கிறேன். நான் ஒரே வார்த்தையில் பரம ஆத்திகன். படித்துக்கொண்டிருக்கும் மாணவனானாலும் தற்கால நாகரிகதின் நடைக்கேற்ற வேகத்தில் செல்லவொட்டாத என் பொருளாதார நிலையில், நான் அணியும் உடையில் கூட எனக்கு நிறைவு உண்டு. தனித்தவனாக இருப்பதும், பிறர் என்னைத்தனித்துப் பார்ப்பது கூட என்னில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியதில்லை. எனது மனத்துணிவிற்கும் தன்னம்பிக்கையின் வலுவிற்கும் சான்றுகள் இல்லை.
இயலாமை காரணமாக நான் இப்படியெல்லாம் இருக்கிறேன் என்பது உண்மை. எனினும், இதிலும் நிறைவு காணும் மனது எனக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பலவற்றை இயலாமை காரணமாக விட்டுக் கொடுக்கும் போது ‘தியாகம்’ என்ற பெரிய வார்த்தையைப் போட்டு, அதற்குப் பக்கத்தில் ஒளிந்து கொண்டு மனம் வெம்பியே இருப்பவன், மனிதருள் சோடை போனவன் என்பது என் கருத்து, முழுவதுமாப் பற்றற்ற வாழ்க்கையையா வலியுறுத்துகிறது இந்து மதம்.
அப்படி அனைவரும் பற்றற்றுப் போய்விட்டால் ரிசர்வ பாங்க் அச்சடிப்பதை நிறுத்த நேரிடும்; லோ ராஜ்ய சபாக்கள் பஜனை தனக்களாகும்ந்ந தொழிற்கூடங்கள் பர்ண சாலைகளாகும். நான் வாழும் காலம், பெட்ரோல் புகையும் பேரிரைச்சலும் உள்ள, அவசரமான, ஆபத்தான, குறுகிய வாழ்க்கை. மதங்கள் அவனவனுக்குத் தன் நிலையையும், தனது பாரம்பரியத்தையும் Origin உணர்த்த பல சந்தர்ப்பங்களை, பல சடங்குகள் வாயிலாகத்தருகிறது. புத்தரின் போதனையில் கூடத் தலையாயது மனவடக்கம் தானே?
மனம் ஒருமைப்பட்டால்சிந்தனைகள் சீராகும். சிந்தனைகள் சீர்பட்டால் செயல்கள் செவ்வனே நடக்கும்.
சிந்தனையும் செயலும் ஒருமித்தால் நியாயம் அநியாயங்கள் தெளிவாகும். அத்தெளிவு உண்டானால் மன அமைதிஉண்டாகும். நமக்குத் தற்போது அந்த அமைதிதான் தேவை. விவேகமற்றவன் சிந்திப்பதில்லை; விவேகமுள்ளவன் மனப் பகுவம் அடைகிறான், இரண்டிற்கும் இடைப்பட்டவன் வாலிபால் பந்துபோல் அலைக்கழிக்கப்படுகிறான். அந்த மென்மையான இன்பமான, மன அமைதியும் நிறைவும் பெறக் கீதை போன்ற இந்து மதத்தின் ஆணி வேரனைய பொக்கிஷங்கள், தற்கால நிலையில் ஒரு சாரசரி நிலையாளன் கடைப்பிடக்கும்படி என்ன சொல்கிறது என்பதையும் இதில் இந்து மதத்தின் தனித்துவம் பற்றியும் தங்களை எழுத வேண்டுகிறேன்.
தங்கள் அன்பன்,

எஸ். வெங்கட்ராம்ன்

கோயமுத்தூர் -9
அன்புள்ள நண்பரே!
உங்கள் எண்ணம் எனக்குப் புரிகிறது.
உங்கள் மனத்தின் கோலங்களை எனக்கு விளங்கும்படியே வரைந்திருக்கிறீர்கள்.
மனிதனின் மனத்துக்கு முதல் தேவை, அமைதியும், நிம்மதியுமே!
எந்தெந்த வழிகளில் அவை உங்களுக்கு கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான வழிகளில் அவை உங்களுக்குக்கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான வழிகளின் மூலம் அவை கிடைக்கப் போவதில்லை.
காமுகனோ, கொலைகாரனோ, சூதாடியோ, பிறர் மனை நயந்து செல்லும் பேதையோ, ஏமாற்றுக்காரனோ, பிற நிரந்தரமான நிம்மதியை அடைவதில்லை.
ஆகவே, நிரந்தரமான நிம்மதிக்காகப் பிறர் வெறுக்காத நல்ல வழிகளைத்தான் நீங்கள் நாடமுடியும்.
அந்த வழி எதுவானாலும், அதை நீங்கள் தேர்தெடுத்துக் கொள்வதை இந்து மதம் தடுக்கவில்லை.
நீங்கள் சொல்வதுபோல், பற்றற்ற வாழ்க்கையை மட்டும் இந்து மதம் போதித்தால், ரிசர்வ் பாங்க் அச்சடிப்பதை நிறுத்த வேண்டும். லோக் சபையும் மக்கள் சபையும் பஜனை மடங்கள் ஆகும் என்பதையும் நான ஒப்புக்கொள்கிறேன்.
இந்துமதம் லௌகீக வாழ்க்கையை வற்புறுத்துகிறது என்பதுதான், இதுவரை நான் எழுதி வந்திருக்கும் தொடர் கட்டுரையின் சாரமாகும்.
மனதுக்கு நிம்மதி என்பது பந்த பாசங்களை அறுத்து விடுவதால் மட்டுமே கிடைக்கும் என்று நான் வாதாட வரவில்லை.
கீதையைக் கண்ணன் உபதேசித்தது அர்ஜூனனுக்கு.
ஆகவே பந்த பாசத்தை அறுப்பது என்பது கீதையின் முழு நோக்கமாக இருக்க முடியாது.
காரணம், அர்ஜூனன் பந்த பாசங்களுக்கு கட்டுப்பட்டவன்.
காதல் உணர்ச்சி மிகுதியும் உள்ளவன்.
போர் என்று வந்தபின் உறவு பார்க்கக்கூடாது என்றுதான் கண்ணன் வாதாடுகிறான்.
அர்ஜூனன் ஆத்மராகம் சஞ்சலிப்பதைத்தான் நிறுத்த முயல்கிறான்.,
தியானத்தால் மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்றுதான் கூறுகிறான்.
யாரையும் சந்நியாசியாகப் போகச் சொல்வது இந்து மதத்தின் நோக்கமல்ல.
வாழ்வைக்கண்டு பயந்தவர்கள், நொந்தவர்கள், லௌகீ வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கண்டவர்கள், பற்றற்ற வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள இந்து மதம் அனுமதிக்கிறது.
ஆனால், லௌகீக வாழ்க்கையிலே சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து மனநிம்மதியைப் பெறக்கூடியவர்களை அது தடுக்கவில்லை.
அதை ஊக்கப்படுத்துகிறது என்ற கூடச் சொல்ல்லாம்.
உங்களுடைய சலனம் “லௌகீக வாழ்க்கையில் மன நிம்மதியைப் பெறுவது எப்படி?” என்பதே.
நீங்கள் எவ்வளவு விவேகமுள்ளவராக இருந்தாலும் அந்த நிம்மதிக்கு இடையூறு எப்போதாவது வந்து சேருகிறது.
அது உங்கள் தலையெழுத்தைப் பொறுத்தது.
ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவளோடு நிம்மதியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்தத் தேர்விலேயே விதி உங்களை வென்று விடக்கூடும்.
நீங்கள் எண்ணியது போன்ற மனைவியாக அவர் இல்லாமற் போய்விடக்கூடும். நிம்மதியை அழிக்கும் சக்தியாக ஆகிவிடக்கூடும்.
வாழ்க்கைக்குப்பொருள் வேண்டுமே என்று நீங்கள் தொடங்குகிற வாணிபன், ஒரு கட்டத்தில் வீழ்ச்சியுற்று, உங்கள் நிம்மதியை அழித்துவிடவும் கூடும்.
உங்கள் நண்பர்கள் நன்றி கெட்டவர்களாகி, உங்கள் நிம்மதியைக் கொன்றுவிடவும் கூடும்.
அதுவே லௌகீக வாழ்க்கைக்கு மன நிம்மதியை வேண்டுபவன், முதலில் அந்த மனதை எந்த அதிர்ச்சியையும் தாங்கக் கூடியதாகப் பக்குவம் செய்து கொள்ள வேண்டும்.
லௌகீக வாழ்க்கையில் மனதைக் கெடுப்பதற்குத் தான் ஏராளமான வழிகள் உள்ளன் என்பதையும், முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.
எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.
முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் கவலைப்பட்டேன்.
நிம்மதி இழுந்தேன்.
பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.
‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்பு என்ற பழமொழிபடி கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.
நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.
ஆயிரம் வராதா என்று அமைதி இழந்து கேட்டது மனது; அதுவும் வந்தது.
அது லட்சம் வரை போயிற்று; அப்போதும் நிம்மதி இல்லை.
வந்த ஏதும் தங்கவில்லை.
‘செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.
பொருளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘வருவதும் வரும், போவது போகும்’ என்று சமநோக்குமுடிவு கொண்டேன், அந்த வகையில் நிம்மதி வந்தது.
ஆனால், லௌகீக வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது, ஒருதுன்பமும் கூட வருகிறதே. என்ன செய்ய?
பேதலித்த மனத்தைப் பார்த்து, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று அழுதேன்.
‘இரண்டு மனம் வேண்டும் ‘ என்று இறைவனைக் கேட்டேன்.
உபதேசத்தில் இறங்கியிருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.
பகவத் கீதையின் தியானயோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.
என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி, சாகப்போகும் பிணங்கள் கதறி அழப்போகின்றன.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யரோ?.
-ஆம்; கதை ஒருநாள் முடியப்போகிறது.
சிலர் அழுது முடிக்கப்போகிறார்கள்!
பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள்!
காந்தியையும் நேருவையும் மறந்துவிட்ட ஜனங்கள் என்னையா நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்?
-இப்படி நினைப்பேன்.
‘போனால் போகட்டும் போடா! வாழ்க்கையை அனுபவித்துச்சாவோம்!” என்று முடிவு கட்டுவேன்.
ஒரு நாள் மயங்கிக் கிடப்பேன். மறுநாள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும்.
உடனே அந்தப் பயத்தை மாற்றிக்கொள்வேன்.
ஆகவே, லௌகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே மனநிம்மதியைப் பெற எண்ணினால் தினசரி வருகின்ற இடையூறுகளைக் களைந்து கொண்டே இருக்க வேண்டும்.. இடையூறுகள் வந்தே தீரும்; அவற்றுக்குப் பயப்படக்கூடாது.
“எல்லாம் கண்ணனின் கட்டளை என்று சிரித்துக்கொடே அப்புறப்படுத்திவிட வேண்டும்.
இப்படி ஓராண்டுக்குச்செய்து பாருங்கள். பிறகு உள்ளம் மரத்துப்போகும்; ஈட்டி வந்து குத்தினாலும் வலிக்காது. முள்ளின் மீது உட்கார்ந்து கொண்டு ரோஜாப் பூவைப் பற்றிப் பாடுகின்ற சக்தி வந்துவிடும்.
நமது பிறப்பு கண்ணனின் விளையாட்டு என்ற ஞானம் வந்துவிடும்.
மற்றவர்களெல்லாம் சிறியவர்களாகவும் நாம் கொஞ்சம் பெரியவர்களாகவும் நமக்கே தோன்றும்.
அடிக்கடி பகவத்கீதை படியுங்கள்; பிறகு நீங்களே உங்கள் மனதைச் சோதித்துப் பாருங்கள்; தேறிவரும்.
எனக்கும் தேறி வருகிறது.

நன்றி :- கவியரசு கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம் I - 22


22. சோதனையும் வேதனையும்


இந்த தொடர் கட்டுரை பற்றி எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.

பெரும்பாலான கடிதங்களில் வேதனையும், சோதனையும், விம்மலும் தொனிக்கின்றன.
வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது தான் என்பதை அறிய முடியாத, பக்குவமற்ற இளம் உள்ளங்கள், தங்கள் ஏக்கத்தை வெளியிட்டிருக்கின்றன.
சில கடிதங்கள் திகைப்பளிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, வட ஆற்காடு திருப்பத்தூரிலிருந்து ஒரு சகோதரி, தனக்கு வேண்டிய வேறு ஒருவரது காதல் கவலையை வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் காதல், நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
ஒரு பெண் தனது பெரியப்பாவின் மகனைக் காதலிக்கிறாளாம்.
இந்துக்களின் அழுத்தமான பண்பாட்டின்படி ரத்த பந்த சகோதரனாகிய ஒருவனை அவள் காதலிக்கக்கூடாது தான் என்றும், ஆனால் எப்படியோ இருவருக்கும் அன்பு அரும்பி விட்டதென்றும், இது பூர்வஜென்மத் தொடர்ச்சியாக இருக்ககூடும் என்றும், அவர் தெரிவிக்கிறார்.
இந்துக்கள் கற்பனைக்கூடச் செய்து பார்க்க முடியாத கெட்ட கனவு தீய நினைவு என்றே நான் இதைக் குறிப்பிடுவேன். ”அந்த ஒருத்தி, ஒருவனை மனப்பூர்வமாக்க் காதலித்து விட்டதால் வேறொருவனை அவள் திருமணம் செய்துகொள்வது அவளது கற்பியல்பிற்குக் களங்கமல்லவா?” என்று அவர் கேட்கிறார். நான் அப்படி நினைக்கவில்லை.
ரத்த பந்தத்தை உணர்ந்துகொள்ளாத நினைவு காதலாகாது.
ஆகவே, அவள் வேறு ஒருவனை மணந்து கொள்வது தவறாகாது.
இந்துகளின் உறவு முறைகள் மிகவும் கண்டிப்பானவை. அர்த்தமுள்ளவை. அதிலே தொய்வோ மாறுதலோ இதுவரை ஏற்பட்டதில்லை.
பங்காளி உறவும், மாமன் மைத்துன்ன் உறவும் வேறு வேறானவை.
அவை ரத்தத்தை அனுசரித்தே உண்டாக்கப் பட்டவை.
ஆகவே, பண்பு கெட்ட நினைவிலிருந்து மீண்டும் வேறு திசையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது ஒழுக்கத்திற்கு உயர்வே தவிர தவறாகாது என்பதை அந்தச் சகோதரிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு நண்பர் மகுடஞ்சாவடி, அ. தாழையூரிலிருந்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்
“என் தாய் மாமனுக்கு ஆறு பெண்கள். அவர்களில் ஒருத்தியை நான் மனமார விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். எங்களது காதலைத் தங்களது வார்த்தைகளில் கூறுவதென்றால் ‘சரீரத்தின் தாளம் அல்ல; ஆத்மாவின் ராகம்’. தாங்கள் குறிப்பிடும் நற்குடியைச் சேர்ந்தவள். அதைவிட மேலாக, நைந்துபோன உறவை மீண்டும் ஏற்படுத்த, என் தாயே அப்பெண்ணை மருமகளாகப் பெரிதும் ஆவலாய் உள்ளார். ஆனால், என் சோதனை என் தந்தையிடம்தான் ஆரம்பிக்கிறது.
என் தந்தை, அவருக்கும் என் மாமாவிற்கும் முன்பு ஏற்பட்ட மனஸ்தாபத்தைக் காரணமாக வைத்து, என் மாமாவின் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்க மறுக்கிறார். அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் என் மாமா வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலேயே ஒரு பெண்ணை எனக்குத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். அவர் பார்க்கும் பெண்ணும்,தங்கள் கூற்றுப்படி ‘நற்குடி’ப்பெண்தான். நானும் கண்டு பேசியிருக்கிறேன்….நல்ல அழகு, நல்ல குணம், நல்ல ஒழுக்கம் நிறைந்தவள்தான்.
நீங்கள் கூறுகிறீர்கள். “பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் கேட்க வேண்டும்; அவர்கள் பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள்” என்று என்னைப் பொறுத்தவரை என் தாயும் தந்தையும் இருவேறு பெணகளை எனக்குப் பேசி முடிக்க விரும்புகின்றார்கள். அந்த இரு பெண்களுமே, நீங்கள் எத்தகைய பெண்களைச் சிபாரிசு செய்கிறீர்களோ அத்தனை தகுதிகளும் உடையவர்களே. ஆனால் என் மனம் என் மாமாவின் பெண்ணைத்தான் நாடுகிறது. என் தந்தையோ அதற்குச் சிறிதும் இணங்கத் தயாராய் இல்லை. அவரை மீறவும் எனக்குத் தைரியம் போதவில்லை. அம்மாவைப் புறக்கணிக்கவும் என் மனம் இடந்தரவிலை. நான் அழுகிறேன். ;குழம்புகிறேன்; துடிக்கிறேன்; இந்தச் சூழ்நிலையில் தங்கள் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
‘நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!

எனவே எனது இந்தக் கடித்த்திற்குத் தாங்கள் தயவு செய்து கொஞ்சம் மதிப்புக்கொடுத்து, என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவும், நான் எவ்வாறு நடந்து கொண்டால் பிரச்சனை தீரும் என்பதற்கு வழிகாட்டித் தாங்கள் பதிலளிதீர்களானால் எனக்கு வழி காட்டிய ‘கண்ணனாக’வே தங்களைப் பூஜிப்பேன் எனக் கூறி என் கடித்த்தை முடிக்கிறேன்’

-இந்த நண்பலின் துயரம் எனக்குப் புரிகிறது.

‘பெற்றோர்தான் பெண் தேடித்தர வேண்டும்’ என்று நான் சொன்னதை ஒப்புக்கொண்டே அவர், தாயும் தகப்பனும் வேறு வேறு பெண்ணப் பார்த்தால் என்ன செய்வது என்ற கேட்கிறார்.
அப்போது விஷயத்தைப் ‘புல் பெஞ்சு’க்கு விட்டுவிட வேண்டும். அதாவது, இருவரும் ஒரு நீதிபதியாக அமர்ந்துவிட வேண்டும்.
எந்தப்பெண்ணுக்கு இவருடைய ‘வோட்டு’ விழுகிறதோ அந்தப் பெண்ணுக்கு இரண்டு வோட்டு விழுந்து விட்டதாக அர்த்தம்.
மெஜாரிடியை நம்புகிற ஜனநாயகத்தில், இத்தகைய முடிவுதான் சரியானது.
பொதுவில் தங்களது காதல் துயரங்களையும் வேறு பல துயரங்களையும் ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின்மேல் துயரம் வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.
திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான். பக்தர்களைப்பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.
முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்றுவிடுகிறது.
பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.
வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப்போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது. சோதனைகளின் பலனாக்க் கிடைத்த அடக்கும் பணிவும் அதிகமாகின்றன.
சோதிக்கப்பட்ட மனிதன் பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.
ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.
நண்பா, வருகின்ற சோதனைகளை யெல்லாம் தாங்கிக் பார்க்கவேண்டும்.
ராசி மாறும் போது, ஜாதகத்தின் நல்ல நேரம் தோன்றும் போது, அதன்பலன் தெரியும்.
நிழலருமை வெய்யிலிலே
நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில்
காண்மின்”

என்றார்கள்.
வீழ்ந்தவன் வீழ்ந்து கொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்துகொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்க வில்லை என்று பொருள்.
ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியும் எழுந்தவனுக்கு வீழ்ச்சியும் தான், இறைவன் இயங்கிக்கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.
பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்பெறுகிறது.
வேறு, வேறான பாதைகளும், வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன.    மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.
விதியும் பூர்வஜென்மும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்.
ஆகவே சிக்கல் நேரும் போதெல்லாம், ‘கண்ணா’ என்றோ, ‘கந்தா’ என்றோ ஒருமுறை  அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.
‘துன்பம் வரும் போது சிரி; அதற்கு அடுத்தாற்போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.
இந்து மதம் வேரூன்றியுள்ள இந்தியாவில், கால நிலையின் மாறுபாட்டுக் கணித்த்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?
கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?
“காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்!

என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்துண்டு.
அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் ‘ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதும்தான்.
பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?
பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.
‘போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.
‘போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.
குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.
அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்தவிடும்.
அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
இறைன் யாரையும் கைவிடமாட்டான்.
இது சத்தியம்.
நன்றி :- கவியரசு கண்ணதாசன்