Friday, December 7, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு!


வணக்கம்

என்னுடைய பதிவுகளில் பல, பல நண்பர்களின் ப்ளாக் மற்றும் இணையத்தில் இருந்து நான் படித்ததில் எனக்கு பிடித்ததை பதிவு செய்தேன். 

இந்த தேடலும் நானும் என்பது என்னுடைய சேமிப்பு கிடங்கு. நான் தேடி படித்ததை மீண்டும் படித்து கொள்ளவே இந்த ப்ளாக்.

ஆனால் இந்த பதிவு கண்டிப்பாக அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்காக....



இந்த ஆய்வை வெளியிட்ட திரு.ராஜ்சிவா அவர்களுக்கு  நன்றிகள்.



இந்த உலகம் 2012 அழியுமா என்ற கேள்விக்கு ராஜ்சிவாவின் பதிலை இந்த தொகுப்பை உங்களுக்கு நான் சமர்பிக்கிறேன்.

மாயன் இனத்தை ராஜ்சிவாவை தவிர வேற யாராளையும் இந்த அளவிற்கு ஆராய்ந்துருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்க்கு அவரின் தொகுப்பு அமைந்துருகிறது. இந்த தொகுப்பு மொத்தம் 225 பக்கங்கள் கொண்டது.

பக்கத்துக்கு பக்கம் அத்தனை தகவல்கள். கொஞ்சம் கூட சலிப்பு தட்டவே முடியாத அளவிற்கு இருக்கிறது  இவரின் தொகுப்பு.







உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்

  • இப்போ உலகமே பயப்படுற குளோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்.
  • உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (ஸ்வல்பர்ட்) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும், கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில் டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது.







Monday, December 3, 2012

ஆதிச்சநல்லூர் - எழுத்தாளர் ஜெயமோகன்



எழுத்தாளர் ஜெய மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை இது. ஆதிச்சநல்லூர் பற்றி கூகுளில் தேடும் போது கிடைத்தது. இக்கட்டுரையை படிக்கும் உங்களுக்கு ஆதிச்சநல்லூர் சென்ற அனுபவம் கிடைக்கும்.


சென்ற மார்ச் பதினொன்றாம் தேதி நானும் யுவன் சந்திரசேகரும் மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஈரோடு நண்பர்கள் தங்கமணியும் கிருஷ்ணனும் நவதிருப்பதிகளுக்குச் சென்றபின் திரும்பும் வழியில் கிருஷ்ணாபுரம் பார்த்துவிட்டு ஆதிச்சநல்லூர் செல்வது என முடிவு செய்தோம். ஆதிச்சநல்லூரைப் பற்றி பொதுவாக நண்பர்களிடையே பெரிய புரிதல் இல்லை. சுருக்கமாக தன் முக்கியத்துவத்தை விளக்கினேன்
ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியில் இருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம். தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. இங்கே தாமிரவருணியின் கரையில் ஒரு மேடு இருந்திருக்கிறது. இந்த மேடு ஒரு இடுகாடு. கிமு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு  ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய பெருங்கலக் காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.
ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு ஆர்வமூட்டும் கதை.  பதினேழாம் நூற்றாண்டு இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும் வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதையல் எடுப்பது ஒரு மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது. இவ்வாறு கண்ட இடங்களில் தோண்டிக்கொண்டிருந்த காலத்தில்  மேய்ச்சல் மக்கள் இந்தக் குன்றில் இருந்து சில  தங்க நகைத்துண்டுகளை தோண்டி எடுத்தனர். பின்னர் இங்கே தேடுதல் வேட்டை  ஆவேசமாக நடந்தது.

புதையல்களை பறி முதல் செய்வதில் ஜரூராக இருந்த பரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு இது சென்றது. அவர்களிடமிருந்து புதைபொருள் ஆய்வாளர்கள் களத்துக்கு வந்தார்கள். 1876ல் பிரிட்டிஷ் ஆய்வாளரான  அலக்ஸாண்டர் ரெயா இங்கே விரிவான தொல்லியலாய்வுகளை நடத்தினார். தென்னிந்தியாவில் இத்தனை பிரம்மாண்டமான தொல்பொருட்குவியல் எங்குமே கிடைத்தது இல்லை. பல்லாயிரம் பொருட்கள் இங்கே கிடைத்தன. மண்பாண்டங்கள், மண்ணினால் ஆன வீட்டுப்பொருட்கள், மண்சிலைகள், வெள்ளி தங்க நகைத்துண்டுகள் இரும்புக்கருவிகள் என அவை பலவகைப்படும்
உண்மையில் இவற்றின் தொன்மையும் அருமையும் அப்போது முழுமையாக உணரப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அன்றைய பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இந்தியப்பெருநிலத்தில் பண்பாடு வெளியில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆரிய இனக்கோட்பாடு ஆய்வாளர்களை முழுமையாகவே கவர்ந்திருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து ஈரான் வழியாக வந்த ஆரியர்களே இந்தியாவில் பண்பாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்ற நம்பிக்கை ஓங்கி இருந்தது. காரணம் ஐரோப்பியர் தங்களை ஆரிய இனமாக எண்ணி ஆரிய இனமே பண்பாட்டின் ஊற்று என நம்பினர்
ஆதிச்சநல்லூர் சான்றாதாரங்கள் இந்தக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானவை. அவை மிகத்தொன்மையான ஒரு பண்பாட்டை காட்டின என்பதோடல்லாமல் அந்தப்பண்பாடு மிக வளர்ச்சி கொண்டிருந்தது என்பதையும் காட்டின. அங்கே கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துருக்கள் இருந்தன. பல்வேறு இறைவடிவங்கள் இருந்தன. உலோகப்பொருட்கள் மிகநுண்மையாகச் செய்யப்பட்டிருந்தன



பல்வேறு காலகட்டங்களிலாக இங்கே தொடர்ந்து தொல்லியலாய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன. நாலாயிரம் வருடப்பழமை அவற்றுக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஏறத்தாழ 114 ஏக்கர் சுற்றளவில் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாழிகள் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக மூன்று மண்அடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறைந்தது ஆயிரம் வருடக்காலம் இந்த இடுகாடு பயன்படுத்தப்பட்டிருக்கப் பட்டதன் ஆதாரம்.
இங்குள்ள உலோகப்பொருட்களும் மண்பாண்டங்களின் உற்பத்தியில் உள்ள நேர்த்தியும் அவற்றில் உள்ள எழுத்துக்களும்தான் ஆய்வாளர்கள் மத்தியில் மிகச்சிக்கலான கேள்விகளை எழுப்பி இன்றுவரை தீராத விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் ஆதிச்சநல்லூர் சிந்துசமவெளி நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கக் கூடும் என்கிறார்கள். இத்தகைய உயர்தரமான உலோகப்பொருட்கள்  இங்கே புழக்கத்தில் இருந்தன என்பதைப் பார்க்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தைவிட மேலான ஒரு பண்பாடு இங்கே இருந்திருக்கலாம் என்கிறார்கள்



மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாக கண்டறிந்துள்ளார்கள். அன்றாடப்புழக்கத்துக்கான மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களைக் காணும்போது அக்காலத்தில் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்றும் அது ஒரு நாகரீக சமூகம் என்றும் ஊகிக்கிறார்கள்.
ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும் அவை சீராக முன்னெடுக்கபப்டவில்லை என்பதும் ஆதிச்சநல்லூர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பதும் உண்மை. வரலாறு எப்போதுமே சமகால வரலார்றுஎழுத்தின் தேவைக்கு ஏற்பத்தான் ஆய்வுசெய்யப்படுகிறது. டாக்டர் சத்யார்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரில் மேலும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கி இன்றைய கவனம் அதன் மீது உருவாக வழிவகுத்தவர். 2004 முதல் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றின் காலக்கணிப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தையும் பிரமிக்கத்தக்க முறையில் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.
ஆதிச்ச நல்லூருக்கு நாங்கள் நல்ல மதிய வெயிலில் சென்று சேர்ந்தோம். அந்த பெரிய செம்மண்பாறைக் குன்றைச் சென்றடைந்ததும் அங்குமிங்கும் பார்த்தோம். தொல்பொருள்துறையின் அறிவிப்போ வேறு அடையாளங்களோ ஏதும் இல்லை. தடுமாறிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய கல்மண்டபத்தில் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டோம். வண்டியை நிறுத்தி அவர்களிடம் ஆதிச்சநல்லூர் இதுதானா என்று கேட்டோம்
அதில் ஒரு கிழவர் எழுந்துவந்தார். ஆடுமேய்ப்பவர் என்பதை அவர் வைத்திருந்த வளைந்த அரிவாள்நுனி கொண்ட துரட்டியாலேயே சொல்ல முடிந்தது. தலையில் ஒரு துண்டு. தொடைக்குமேல் கட்டிய அழுக்கு வேட்டி. டயர் செருப்பு. சட்டை இலலத கரிய உடல் மெலிந்து உறுதியாக வெயில்பட்டு காய்ந்து கரிந்து ஒரு காட்டுச்சுள்ளி போல இருந்தது. தங்கமணி இறங்கிச் சென்று விசாரித்தார்
கிழவர் அருகே வந்து ”இதுதான் எடம்…இதுதான் ஆதிச்சநல்லூர்…ஆனா இங்க ஒண்ணுமே கெடையாது. எல்லாத்தையும் மெட்ராஸ¤க்குக் கொண்டு போயிட்டாங்க… எங்கயோ வச்சிருக்காங்க…ஒண்ணுமே இங்க கெடையாது” என்றார். ஏமாற்றமாக ”சரி எடத்தையாவது காட்டுங்க ”என்றேன்


”எதுக்கு இந்த வெயிலிலே” என்றான் யுவன். நான் ”சரி வந்தாச்சுல்ல?” என்றேன். கிருஷ்ணன் ”ஒண்ணுமில்ல சார், வெப்சைட்டுலே எழுதணுமேன்னு போய் பாக்கலாம்னு சொல்றார்” என்றார். ”நான் அதுக்கும்தான், என்ன இப்ப?” என்று இறங்கினேன். கிருஷ்ணனும் பிறரும் கூட்வே வந்தார்கள்.
அங்கே குழிதோண்டியெடுத்த பொருட்களைக் கொண்டுசென்றபின் குழிகளையும் சுத்தமாக மூடிவிட்டார்கள்.  மூடிய  குழிகள் மேலே நடந்தோம் ”இங்கதான் இந்திய நாகரீகமே உருவாகியிருக்கு…மறைக்கிறானுங்க” என்றார் சிதம்பரம். சரிதான் இன்னொரு உள்ளூர் வளவள  என்று எண்ணிய கிருஷ்ணன் சற்றே கடுப்பாகி ”ஆமாமா, உலக நாகரீகமே இங்கதான்”என்றார்.  நான் கிருஷ்ணனின் கையைப்பிடித்து அழுத்தி சும்மா இருக்கச் சொன்னேன். ஏனென்றால் நாகரீகம் என்ற சொல்லை அத்தனை சாதாரணமாக ஒரு கிராமவாசி சொல்ல மாட்டார் என்று தோன்றியது
கிழவர் என்னிடம் ”இதிலே தமிழ் ஆசிரியர் யாராவது உண்டா?”என்றார். இல்லை என்றேன். அவர் பெருமூச்சு விட்டு ”பாத்திஹள்ல? எப்டி போட்டுவச்சிருக்கானுக? ஒரு குறிப்பு உண்டா? ஒரு அடையாளம் உண்டா? எடுத்த பொருட்களை அங்கங்க தொல்பொருள்துறை ஆபீஸ்களிலே  பிரிச்சு பதுக்கி வச்சிருக்காங்க. என்ன செஞ்சிருக்கணும், இங்க ஒரு மியூசியம் கட்டியிருக்க வேண்டாமா? இங்க எல்லாத்தையும் வச்சு வேணுங்கிறவன் இங்க வந்து ஆராய்ச்சி செய்யச் சொல்லணும். அப்பதான் இந்த எடத்தோட முக்கியத்துவம் தெரியும். இது எப்பேற்பட்ட எடம் இதோட வரலாறு என்ன எல்லாம் வெளியே தெரியும்….இப்ப ஆதிச்சநல்லூர்னா யாருக்குத் தெரியும்? நான் ஜனாதிபதிக்கு எழுதினேன். கவர்னருக்குஎழுதினேன். கலைஞருக்கு எத்தனையோ மனு கொடுத்திருக்கேன். யாருக்கு அக்கறை? ஒண்ணுமே நடக்கலை”
கிருஷ்ணன் பிரமித்துப் போய்விட்டார். கிழவர் சரசரவென பேசிக்கொண்டே போனார் ”இதுதான் இந்தியாவிலேயே பழமையான தொல்பொருள் எடம். இங்கதான் இந்தியாவிலேயே வளார்ச்சிஅடைஞ்ச நாகரீகமும் கண்டுபிடிச்சிருக்காங்க…இன்னும் முழுசா கண்டுபிடிக்கலை…கண்டுபிடிச்சிட்டே இருக்காங்க…எழுத்துக்களை இப்பதான் கண்டுபிடிக்கிறாங்க…ஏய், தாழிகளிலே நெல்லும் உமியும் இருந்ததே அது என்ன எனம் நெல்லுன்னு கண்டுபிடிச்சியா நீ? அந்த நகையில எப்டி செம்பையும் தங்கத்தையும் கலந்தான்னு கண்டுபிடிச்சியா நீ? இல்ல. இதுவரைக்கும் ஒரு நல்ல ஆராய்ச்சி நடக்கலை…”
”ஏன்? ஏன்னா நாகரீகம்னா அது வடக்கேன்னு வெள்ளைக்காரன் சொல்லிட்டான். அவனுக்கு மூக்கு நீளமான ஈரானிலே இருந்து பண்பாடு வந்ததுன்னு சொல்ல ஆசை. அதுக்கு சிந்து சமவெளி நாகரீகத்தை உசத்திப்பிடிக்கணும்….அப்பவே ஆதிச்சநல்லூரைக் கண்டுபிடிச்சாச்சு. எத்தனை அறிஞர்கள் பேசியிருக்காங்க? பேசலை. அப்டியே விட்டுட்டாங்க. நம்மாளுகளும்  அதுக்குமேலே பேசலை. அம்பதுவருடம் ஆதிச்சநல்லூரைப்பத்தி பேச்சே கெடையாது ஐயா…வெளங்குமா? நாடா இது?  வெள்ளைக்காரனுக்கு கறுப்பன்னா எளக்காரம் இங்க வந்து பனங்கொட்டை மூஞ்சுற நம்ம பயக்களை போட்டோ பிடிச்சு பேப்பரிலே போட்டு எல்லாரும் ஆதிவாசிகள் இங்க நாகரீகமே கெடையாதுன்னுட்டான். உண்மையா ஒருத்தன் ஆராய்ச்சி செஞ்சா அவனுக்கு தெரியும் ஆதிச்சநல்லூரோட எடம் என்னன்னு…இப்ப வருது…இப்ப ஒண்ணொண்ணா சில ஆய்வுகள்லாம் வருது…அப்டி புதைச்சு வச்சிட முடியாது…”
எனக்கும் அது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஆதிச்சநல்லூரில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் வைக்கக் கூடாது? ஒரு நிரந்தர தொல்பொருள் மையம் இங்கே உண்டு என்றே எண்ணியிருந்தேன். அந்த மகத்தான தொல்பொருள் புதைபூமி இப்படி கைவிடப்பட்டு திறந்து கிடப்பதை எண்ணவே ஆச்சரியமாக இருந்தது. ஆதிச்சநல்லூர் தொல்பொருட்களை ஏன் பல்வேறு இடங்களிலாக பிரித்து வைக்கவேண்டும். அவை ஆய்வாளர்களுக்கு உரியவை, சரி. ஆனால் அவை மக்கள் பார்வைக்கும் உரியவை அல்லவா? அவை மாபெரும் குறியீடுகள் அல்லவா? ஒரு சமூகம் தன் வேர்களை உணரும் ஆன்மீகமான பேரனுபவத்தை அளிக்க வல்லவை அல்லவா? குறைந்தபட்சம் ஆதிச்சநல்லூரில் அந்த அரும்பொருட்கள் எங்கே உள்ளன என்றாவது ஒரு குறிப்பு இருக்கலாமே? 
கிழவர் பேசிக்கொண்டே போனார். ”ஆரியன் திராவிடன் ஒண்ணும் கெடையாது. எல்லாம் இங்கேருந்து போனவங்க தான்… இதுதான் பூர்வீக நெலம். இந்த தாமிரவருணி மண்ணு… எத்தனை ஆயிரம் வருஷம் முன்னாடி… மொகஞ்சதாரோ ஹரப்பா எல்லாம் இங்கேருந்து போனவங்க உண்டுபண்ணின விஷயங்கள்.  இந்தியாவிலே உளல் எல்லா சிந்தனைகளும் இங்கேருந்து மேலே போனதுதான்…இதைச் சொல்ல இன்னைக்கு ஆளில்லை…” நான் சீண்டுவதற்காக ”ஆனா ஆதிச்சநல்லூர்னுதானே பேரு? ஆதித்தன்னா வடமொழியாச்சே” என்றேன்
”ஆதித்த நல்லூர்னு எவன் சொன்னான்?”என்று கிழவர் நின்றுவிட்டார். ”…இந்த ஊருக்குப்பேரு ஆதி எச்ச நல்லூர்…இது எத்தனையோ காலமா சுடுகாடா இருந்திருக்கு. இந்த எடம் சுடுகாடா ஆனதுக்கு அந்தக்காலத்திலே ஏதோ காரணம் இருந்திருக்கு…தேடிக்கொண்டுவந்து புதைச்சிருக்காங்க…ஏன்னு தெரியல்லை” கிழவர் கோபமானார் ”ஆதித்தன்னு பேரு வச்சுகிட்டவன் சோழன்…பாண்டியனுக்கு அந்தபேரு கெடையாது. ஏன்னா சோழர்கள் சுத்த தமிழர்களே கெடையாது. வெங்கிநாட்டுலேருந்து வந்தவனுங்க. ஆதித்தன்னு எங்க சொல்லியிருக்கு தமிழிலே? ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்னுதானே இளங்கோ சொல்றார்?”
நான் ”ஆதின்னாலும் வடமொழிதானே?”என்றேன். ”என்னய்யா? ஆதிங்கிற வடமொழிச்சொல்லுக்கு எங்க வேர் இருக்கு? சொல்லுங்கய்யா…ஆதிங்கிற சொல்லு சுத்தமான தமிழ்ச்சொல்லு. அதுங்கிற வேர்தான் ஆதியாகியிருக்கு. அதை வடமொழிக்காரன் எடுத்துகிட்டான். அவன் மொழியே முக்காவாசி சொற்களை அங்க இங்க இருந்து பொறுக்கி எடுத்துக்கிடுறதுதான்…” அதற்குமேல் நான் அவரிடம் பேச ஒன்றுமில்லை. அவர் சொன்னது உண்மை. ”நம்ம வரலாறுக்கு எத்தனையோ ஆழம் இருக்கு தம்பி …நீங்கள்லாம் படிச்சுப்பாக்கணும். சிலப்பதிகாரத்திலே சொல்லியிருக்கு ப·றுளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள அப்டீன்னு…நம்ம வேரு எங்கியோ கெடக்கு”
கிழவர் ஒரு உடைந்த ஓட்டுக்குவியலைக் காட்டினார். ”இதெல்லாம் மண்பாண்டக்குவியல் உடைஞ்சது. சும்மா வந்துகிட்டே இருக்கு…” கறுப்பு ஓடுகள் சிவப்பு ஓடுகள் கறுப்பும் சிவப்பும் கலந்த ஓடுகள். மிக மெல்லியவை,ஆனால் மிக உறுதியானவை ”அந்தக்ககாலத்திலே இலுப்பை எண்ணையைப்போட்டு களிமண்ணை பெசைஞ்சு பானை வனைஞ்சாங்க. அந்த இலுப்பை எண்ணைதான் கறுப்பா ஆகியிருக்கு…”என்றார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணில் நின்று அந்த கலத்தூண்டுகளை எடுத்துப் பார்ப்பது மனக்கிளர்ச்சி ஊட்டும் அனுபவமாக இருந்தது. என்றோ ஒருநாள் ஆதிச்சநல்லூரின் பாடங்கள் மேலும் துல்லியமாகப் படிக்கப்படலாம். அப்போது நம் வரலாறு முழுமையுடன் மேலெழுந்து வரலாம். ”அப்ப நான் கெளம்புறேன்…”என்றார் கிழவர்
”அய்யா பேரு என்னங்க?” என்றேன் ”சிதம்பரம்…” என்றார். ”என்ன பண்றீங்க?”என்றான் யுவன் ”பாத்தா தெரியலை, மாடுமேய்க்கிரது. நமக்கு அந்தப்பக்கமா கொஞ்சம் நெலம் உண்டு. வெவசாயம். ஸ்கூலுக்குப் போகலை. அண்ணாவைத்தான் படிகக் வச்சாங்க. எல்லாம் நானே வாசிச்சு படிச்சுகிட்டதுதான்” ”இப்பவும் படிக்கிறீங்களா?”என்றார் கிருஷ்னன் ”நாளைக்கும் படிப்பேன்”என்றார் சிதம்பரம் ஆணித்தரமாக. ”அப்ப நான் வாரேன்” கும்பிட்டு கெளம்பினார்
”சார் தலையிலே கடப்பாரையாலே அடிச்சது மாதிரி இருந்தது”என்றார் கிருஷ்ணன் ”ஆனா எனக்கு ரொம்ப தேவையான அடிதான்” என்றார். யுவன் சந்திரசேகர் ”என்னய்யா இது கதையிலே இருந்து எந்திரிச்சு வாரதுமாதிரி வந்திட்டார்…  சொன்னா நம்பவே மாட்டாங்க…”என்றார் .”அவரு நம்மளை ஒரு பொருட்டாகவே நெனைக்கலை பாத்தியா? அவருக்கு நம்ம கிட்ட பேசுறதிலே ஆர்வமே கெடையாது. நாம வழி கேட்டப்ப பேசாமத்தான் இருந்தார். கட்டாயப்படுத்தி தங்கமனி கூப்பிடப்பதான் வந்தார்…”
அங்கிருந்து திரும்பும்போது எண்ணிக்கொண்டேன் , ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் இன்னும் எத்தனையோ தொல்மூதாதையர் உறங்கிக்கொண்டிருக்கலாம். நம் ஞானம் இன்னும் சென்று தீண்டாத ஆழத்தில். சிதம்பரம் வாயிலிருந்துகோண்டு அவர்கள்தான் பேசியிருக்கிறார்கள்.



Source: http://www.jeyamohan.in/?p=2143


ஆதிச்சநல்லூர் தாழி..!



தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!

அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்சநல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்சநல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.


"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

நன்றி: தமிழ்ச்சாரல்

Tuesday, June 12, 2012

காலக் கணிதம்.......!


தமிழனின் காலக் கணிதம்


பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்.......!


 செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர். 



பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.


வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.


சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்


"சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும்
ஐப்பசிக்குப்பின்னைந்து மாதம் 
பிசகாமல் இரவேறும்மின்னே விடுபூ முடி“


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக (பகல்=30, இரவு =30) இருக்கும். ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும். ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி   "விடுபூ முடி" மிக மிக முக்கியமான வரியாகும். இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும் 

பகல் நீட்டிப்பை காண வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்


வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி


இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்.


மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறைவி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும். 
எனவே 
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை 


ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும். 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்


இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது பகல் நீட்டிப்பு.
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம் 


இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்


நன்றி : தோழர் அ.குரு


நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.

60 - நாழிகையை ஒரு நாளாகவும்

ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும்

ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்) பன்னிரண்டு ஓரை [ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாகவழங்கி வந்தன.
அவை:–
மேழம் (சித்திரை)
விடை (வைகாசி)
ஆடவை (ஆனி)
கடகம் (ஆடி)
மடங்கல் (ஆவணி)
கன்னி (புரட்டாசி)
துலாம் (ஐப்பசி)
நளி (கார்த்திகை)
சிலை (மார்கழி)
சுறவம் (தை)
கும்பம் (மாசி)
மீனம் (பங்குனி)


இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன

Monday, January 31, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் II - 04



04. ஒரு புதிய சிந்தனை


ராமகிருஷ்ணா மிஷனைப் போல, உத்திரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் ஸ்ரீராம சந்தர மிஷன் என்று ஒன்று இருக்கிறது.
இதனுடைய ஸ்தாபகர் மகாத்மா ஸ்ரீராம் சந்தரஜி ஆவார்கள்.
அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய `சத்யோதயம்’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும், சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு அனுப்பியிருந்தார்.
இந்து மதத்தில் அவர் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத ஒன்றாகும்.
விக்கிரக ஆராதனையை வெறும் ஸ்தூல ஆராதனை என்று வருணித்து, அது மனத்தின் உள் நோக்கத்தை அதிகமாகப் பூர்த்தி செய்வதில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.
வெறும் ஸ்தூல வழிபாட்டில் சிக்கியவர்கள் பெரும் ஆன்மிகப் பயிற்சியைப் பெற்றதில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள்.
ஸ்ரீராம் சந்தரஜியும் அதைத்தான் கூறுகிறார் என்றாலும், மற்றவர்கள் கூறாத புதிய கருத்துகளையும் கூறுகிறார்.
கோஷ்டி பஜனைகளைப் பற்றி அவர் கூறும் போது, கூட்டமாக உட்கார்ந்து பஜனை செய்வதில், தெய்வத் தியானம் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை என்கிறார்.
விக்கிரக ஆராதனையும், பஜனைகளும் பக்குவமில்லாத தாழ்ந்த நிலையில் ஆரம்ப நிலையில் மட்டுமே பயன்படும் என்கிறார்.
சாதாரணமாக, இன்றைய இளைஞர்களின் மனத்தில் இதே சிந்தனை தோன்றியிருப்பது கவனிக்கத் தக்கது.
“கோவிலுக்குப் போய்க் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் என்ன கிடைக்கிறது?”.
“பஜனைப் பாடல்களை சத்தம் போட்டுப் பாடுவதில் என்ன பயன் இருக்கிறது?” என்று தான் இன்றைய இளைஞர்களும் கேட்கிறார்கள்.
ஆத்மாவுக்கு அமைதிப் பயிற்சி அளிப்பது பற்றியும், மனத்தின் கடிவாளங்களை இழுத்துப் பிடிப்பது பற்றியும், ஸ்ரீராம் சந்தரஜியின் கருத்துக்கள் சுவையாக இருக்கின்றன.
முழுப் பிரயத்தனத்தோடு தனியாகத் தியானம் செய்வதை அவர் வற்புறுத்துகிறார்.
இவை அனைத்தையும் விட, லௌகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பற்றற்ற வாழ்க்கையையும், துறவி வாழ்க்கையையும் போதிப்பதை அவர் கண்டிப்பதில் அர்த்தமிருக்கிறது.
குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே பற்றுகளைச் சமநிலைப்படுத்தி, அளவற்ற ஆசையின்றிப் பண்பாடாக வாழும் வாழ்க்கையிலே மதபோதனைகளை போதிக்க வேண்டுமென்கிறார்.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் லௌகீக வாழ்க்கையின் இச்சைக்கு ஆட்பட்டு வாழ விரும்புகிறார்கள்.
தொல்லைகளையும் துன்பங்களையும் காணும் போது, அவர்கள் வேதனை அடைகிறார்கள்.
அந்த வேதனையைச் சாக்காகக் கொண்டு, `அவர்களை வீட்டைவிட்டு ஓடு’ என்று போதிப்பது, என்ன நியாயம் என்று கேட்கிறார்.
அவர் கூறுகிறார்:
“உபத்திரவங்களும் இடுக்கண்களும் ஜீவிதத்தில் பூரணமாக இல்லாமற் போவதென்பது நடக்காத காரியம்; இயற்கைக்கும் மாறானது; உண்மையில், அவை நமது மேன்மைக்காகவே ஏற்பட்டவை. அவை நோயாளிக்கு ஆரோக்கியம் உண்டாவதற்காகக் கசப்பு மாத்திரைகள் கொடுப்பது போலாகும். மிக உயர்ந்த நல்ல வஸ்துவானாலும், சரியான முறையில் உபயோகப் படுத்தக்கூடாது போனால், உபத்திரவங்களை விளைவிக்கும். துன்பங்களின் விஷயமும் இப்படியே. எவற்றையும் சரியான காலத்தில், சரியான முறையில், சரியாக உபயோகித்தால், நாளடைவில் அவை நற்பலனை அளிப்பது திண்ணம்.
உண்மையில் துன்பங்களே நமக்கு மேன்மையான வழிகாட்டிகள். அவற்றால் நமது மார்க்கம் செம்மைப்படுகிறது. சாமானிய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மனிதனுக்கு அவனைச் சரியான முறையிலிருக்கச் செய்யத் துன்பங்கள் மிகவும் உதவியாயிருக்கும். குடும்பக் கஷ்டங்களையும் உலக வாழ்க்கையிலுண்டாகும் துயரங்களையும் பற்றி எனது குருநாதர் இப்படிச் சொல்வதுண்டு. `நமது இல்லமே அமைதியும் பொறுமையும் அடைய நாம் பயிலுமிடம். கிருஹஸ்தாச்ரமத்தில் நாம் படும் வறுமை, இடுக்கண்களைப் பதறாது பொறுப்பது நாம் இயற்றும் பெருந்தவம். இதனிலும் உயிரிய தவம் வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், கோபத்திற்காவது துக்கத்திற்காவது இடங்கொடாமல், குறைகூறும் மனப்பான்மையை ஒழித்து நமது குற்றத்திற்காகவே நாம் அனுபவிக்கிறோம் என்று நினைத்து, சாந்த மனத்துடன் பொறுமையாய் இருக்கவேண்டும்.
காட்டில் தனித்த வாழ்வும், உலக விஷயங்களில் கலக்காது விலகி நிற்றலும் சிலருக்குப் பொறுமையையும், அமைதியையும் பழகச் சாதனங்களாகும். ஆனால் நமக்குப் பந்துமித்திரர்களின் இகழ்ச்சியும், சுடுசொற்களும் அரிய பெரிய தவத்திற்கொப்பாகி வெற்றிக்கு ஒப்பற்ற சாதனங்களாகின்றன.’
“உண்மையில் துன்பங்களையும் சடங்குகளையும் நாம் அமைதியுடன் பொறுத்தோமேயாகில், அவை நம்மை மேம்பாட்டடையச் செய்து, மேல்நிலைகளுக்குச் செல்வதற்கு வேண்டிய முக்கிய சாதனங்களாகும். அங்ஙனம் அல்லாது முரணான வழியில் உபயோகித்தோமேயாகில், நற்பலன் அழிந்துபோய் நாமடையவிருக்கும் ஆதாயம் கெட்டுப் போகும்.”
“பரித்தியாகம், அதாவது பற்றுதலற்ற தன்மை ஒரு முக்கிய நிலை என்பதில் சந்தேகமில்லை. பற்றற்றாலன்றி மாயையின் சிக்கல்களிலிருந்து தப்பமுடியாது. ஆனால் நாம் மனையை விட்டகன்று, குடும்பம் லௌகீக விஷயங்களெல்லாவற்றையும் புறக்கணித்துத் துறவு பூண்டு சந்நியாசியாக வேண்டியதில்லை. இல்லறமும் இல்வாழ்க்கையும் துறந்து உலக பந்தங்களை விட்டுவிட்டு, ஏகாந்தத்தை நாடி நிற்பதே பற்றற்றுப் போவதற்கு ஒரே சாதனம் என்னும் கொள்கையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பலாத்கார முறையில் சர்வசங்க பரித்தியாகம் செய்வது நிஜமானதன்று. ஏனெனில் உலகத்தைத் துறந்துவிட்டாற் போலத் தோன்றினாலும் கூட, உட்கருத்தில் அவர்கள் உலகத்தைப் பற்றியே நிற்கக் கூடும்.
இல்லற வாழ்க்கையில் நாம் அநேக விஷயங்களைக் கவனிக்க வேண்டுமென்பதற்கு சந்தேகமில்லை. சம்சாரத்தைத் தாங்க வேண்டும். மக்களின் கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள் வேண்டுவனவற்றையும், அவர்களை வெப்பம், குளிர், நோய், துன்பங்கள், மற்றெல்லாவற்றிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். இப்படி முக்கியமாக வேண்டியவற்றிற்காக நாம் பணமும் ஆஸ்தியும் சம்பாதிக்கிறோம்.”
“இப்படி நாம் சம்பந்தப்பட்டுள்ள விஷயங்களில் அளவு கடந்து பற்றுதல் கொள்வதே உண்மையில் தீமையாகும். இதுவே நமது இடுக்கண்களுக்கு முக்கியக் காரணம். ஆனால், விருப்பு வெறுப்பற்று நமது கடமை என்று நாம் காரியங்களைச் செய்வோமாகில், உலகப் பற்றுதல்களினின்று ஒருவாறு விலகியவராகி, அநேக உடைமைகளைப் படைத்து அவற்றைக் கையாளுபவராயிருப்பினும், உண்மையில் உலகைத் துறந்தவராகிறோம். இத்தன்மையில் உடைமைகள் பலவானால் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தர்மத்தைச் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளவை என்பதும் தெளிவாகும்.
சங்க பரித்தியாக மென்பதற்கு உலகப் பற்றற்றுப் போதல் என்பது உண்மையான பொருளாம். உடைமைகள் இல்லாது போவதென்பது பொருளாகாது. ஆகையால், இன்றியமையாதவாறு ஆஸ்திகளைப் பெற்று உலகத்துடன் சம்பந்தம் கொண்டுள்ள இல்லற வாழ்க்கையை, விஷயங்களில் அளவுக்கு மிஞ்சிய பற்றற்று நடத்தினால், பரித்தியாகத்திற்கு, அதன் விளைவான சத்திய நிலை எய்துவதற்கும் இவை தடையாக மாட்டா.”
“எண்ணற்ற மகான்கள் ஆயுள் முழுவதும் இல்லற வாழ்க்கையை நடத்திக் கொண்டே மகா உன்னதமான பூர்ணத்துவத்தை அடைந்திருக்கின்றனர். பரித்தியாகம் என்பது மனத்தின் உள்நிலை. அது வஸ்துகளின் நிலையற்றதும் மாறுபடுவதுமான தன்மையை உணர்த்துவதோடு அவற்றின்மேல் அவிச்சையை உண்டுபண்ணும். மேலும் நித்தியமானதும், மாறுபாடே இல்லாததுமான சத்தியத்தின் மேலேயே நோக்கம் நிலைத்து, விருப்பு, வெறுப்பு என்னும் உணர்ச்சிகளுமற்றுப் போகும். உண்மையான வைராக்கியம் (Renunciation) என்பது இதுவே.”
“நமது மனத்தின்கண் இந்தப் பாவம் ஏற்பட்டதும் நமக்குப் பற்றற்றுப் போகும். கிடைத்த மட்டும் திருப்தியடைந்திருப்போம். பற்றற்றுப் போகவே, ஸம்ஸ்காரங்கள் உண்டாவது நின்று போகும். இப்பொழுது எஞ்சியுள்ளது ஏதெனில், இதுவரை சேமித்த ஸம்ஸ்காரங்களை ஜீவிதத்தில் அனுபவித்துக் கழிப்பதே. பிரகிருதியும் ஸம்ஸ்காரங்களை காரண சரீரத்துடன் அனுபவித்துத் தீர்த்துக் கொள்வதற்காகத் தக்க இடத்தைச் சிருஷ்டி செய்து நமக்கு உதவி செய்யும். இப்படியாகப் புரைகள் கரைந்து போனதும், நாம் சூக்ஷ்மரூபம் அடைந்து நிற்கின்றோம்.”
“நமது எண்ணங்களையும் செயல்களையும் அடக்குவதற்கு சதா ஒலித்துக் கொண்டேயிருக்கும் மனம் சரியான முறையில் வேலை செய்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். மதபோதகர்கள் மிக்க கசந்த வார்த்தைகளால், மனதைக் கடிந்து தூஷித்து, அதற்கு கெட்ட பெயர்கள் எல்லாம் இட்டு, அதை நமது பெரிய விரோதி என்று பழிப்பதைப் பலமுறை கேட்டிருக்கின்றேன். இதன் காரணம் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். அவர்கள் நம்மிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் மனமே காரணம் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக மனம் போன போக்கே போகாது, அதை நசுக்கிவிட வேண்டுமென்று ஜனங்களுக்குப் புத்தி புகட்டுவர். ஆனால் ஜனங்கள் மனத்தின் கவனத் தன்மையைக் கட்டுப்படுத்தவோ, அதன் சொற்படி கேளாதிருக்கவோ முடியாமல் இருக்கின்றனர்.”
“கோட்பாடுகளைச் சார்ந்து சொல்லப்பட்ட புத்திமதிகளும் உபந்நியாசங்களும் கொஞ்சமும் உபயோகப்படுவதில்லை. உபந்நியாசங்களைக் கேட்ட எவரும் மனமடக்குதல் என்பதை நடைமுறையில் அடைந்ததேயில்லை. மேலும் தற்காலச் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும், மனத்தை மேன்மேலும் சலிக்கச் செய்கின்றன. இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஜீவிதம் நடப்பதே கடும் போரெனவும், வறுமை, பாதுகாப்பில்லாமை, இடுக்கண்கள், போட்டிகள் என்னுமிவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் விளைவினின்று தாம் விலகி நிற்க முடியாதென்றும் நினைப்பர். இதனால் எப்போதும் அமைதியின்மையும், மனசஞ்சலமும் ஏற்படும். இந்தப் பாவம் நமது சுவாசத்திலும் கலந்து உட்சென்று சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இழுத்துச் செல்லும். நமது தனிமையானது காற்றுக் காட்டிபோல் நமது பாதம் போகும் போக்கிலேயே போகும் தனது தைரிய சாகஸங்களால். இதை எவன் எதிர்த்து நின்று பாதிக்கப் படாமல் தன்னைக் காத்துக் கொள்கிறானோ அவனே தீரன்”.
ஸ்ரீராம்சந்த்ரஜியின் இந்தக் கருத்தை நான் முழு மனத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பக்கட்டத்திலேயே இதை நான் கூறியிருக்கிறேன்.
வாழ்க்கையை வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு, துன்பங்கள் வந்தே தீரும் என்பதைப் போதித்து, வருகிற துன்பங்களை எப்படிச் சமாளிப்பது என்று யோசனையும் சொன்னால், சராசரி மனிதனுக்கு அது வழி காட்டும்.
மதத்தின்மீது பற்றுதலையும் ஏற்படுத்தும்.
நான் படித்தவரை, பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை அடையும் வழி என்று சொன்னவை எல்லாம் முழுக்க முழுக்கப் பந்தபாசங்களை அறுத்தெறிந்து விட்டு வாழ்வது பற்றியனவாகவே இருக்கின்றன.
குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டே ஒருவன் யோகியாக முடியும்; மகான் ஆக முடியும்; முக்தியடையவும் முடியும். அதற்கான வழியை இந்துமத போதகர்கள் அதிகம் சொல்லவில்லை என்பதே என் கருத்து.
வள்ளுவன் அதை வலியுறுத்தியிருக்கிறான்.
இல்லறத்தில் துறவறம் என்ற தலைப்பில் சொன்னவர்கள் கூட ஒரு கட்டத்தில் மனைவியைத் தாய்போலப் பாவிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
உடல் இச்சைகளிலிருந்து விடுபடச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்ரீராம்சந்தரஜி எதிலிருந்தும் விடுபடச் சொல்லவில்லை. அதற்கு ஒரு அளவை நிர்ணயித்து கொள்ளச் சொல்லுகிறார்.
அந்த அளவு என்பது ஏறக்குறையத் திருக்குறளை ஒட்டியே இருக்கிறது.
பகவத் கீதையில் பரந்தாமன் கூறும் மனத்தின் சமநிலையே, வள்ளுவரும் ஸ்ரீராம்சந்த்ரஜியும் வலியுறுத்தும் அளவாகும்.
இன்பங்களையே அனுபவிக்காமல், ஒருவன் துறவு பூண்டால், அந்த இன்பத்தை நோக்கியே அவன் மனம் ஓடிக் கொண்டிருக்கும்.
அவன் எந்தக் காலத்திலும் முழு ஞானம் பெற முடியாது.
அனுபவித்து ஞானம் பெற்றவர்கள்தான் தலைசிறந்த ஞானிகளாகக் காட்சியளிக் கிறார்கள்.
பற்றற்ற வாழ்க்கை என்பதற்கு ஸ்ரீராம்சந்தரஜி கொடுக்கும் விளக்கத்தை நவநாகரிக இளைஞர்கள் கூட விரும்பி ஏற்றுக் கொள்ளுவார்கள்.
சத்தியம் உதயமாவதற்குத் தத்துவரீதியாகவும் பிரத்தியட்சக் கண்ணோட்டத்திலும் அவர் சொல்லும் வழிகளைச் `சத்யோதயம்’ என்ற நூல் தெளிவாக விவரிக்கின்றது.
இந்நூலைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைப்பதுக் கூட பொருத்தமானது என்பது என் கருத்து.
இந்தத் தமிழ் நூல் கிடைக்குமிடம்: ஸ்ரீராமசந்த்ரமிஷன், ஷாஜகான்பூர். (உ.பி.)

நன்றி :- கவியரசு கண்ணதாசன்


அர்த்தமுள்ள இந்துமதம் II - 03



03. வாசலில் அமீனா நிற்கிறான்
தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.
காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.
அதை பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்.
“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”
தமிழர் பதில் சொன்னார்;
“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுப்படுத்திக் கொள்கிறோம். அதன் மூலம் கெட்ட புத்தி விலகிவிடுகிறது.”
ஆங்கிலேயர் திகைத்துப்போனார்.
அன்று முதல் இந்து மதத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினார்.
இன்றும் லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.
"யாக்கை நிலையாமையை" இந்து சமய தத்துவஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.
வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.
விட்டுவிடப் போகுதுயிர்; விட்டவுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்.

-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையைக நடத்துமாறு செய்வதற்கே.
இந்த ஞானம், ஒவ்வொர் சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.
ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும் போது “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.
அதையே மயான வைராக்கியம்’ என்பார்கள்.
“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.
‘பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே. நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே. என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.
இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.
இந்த உடல் இலவசமாக்க் கொடுத்த பரிசு.
தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபக்க் கடிதம்.
‘நீ கையெழுத்துப்போட்ட பாத்திரம் காலாவதியாகிப் போகிறது.
கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.
உன் உயிரை நான் ஜப்தி செய்யப்போகிறேன்.
-என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.
உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.
அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள்.
உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.
சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.
அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச் செய்வது, இந்து சமயவாதிகளின் நோக்கங்களில் ஒன்றாகும்.
எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!
மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ
நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில்
மனைஇருக்கச் சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச் செத்துக் கொட்டக்
கண்டு!
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு
ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே
அலைந்தாயே!
வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை
தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு!
முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!
எத்தனைநாள் கூடி
எடுத்த சரீரம் இவை!
அத்தனையும் மண்தின்ப
தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே?
இருப்பதுபொய் போவது
மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை
யுன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!

-இவை பட்டினத்தார் பாடல்கள்.
காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.
“செத்தாரைப் போலே திரி” என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.
அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப் படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது.
வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.
முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.
இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.
மூன்றாவது சங்கு மரணத்திற்குப்பிறகு ஊதப்படுகிறது.
அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.
சங்கம் என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும், சங்கம்ம் ஆவதையும் குறிக்கும்.
‘முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால்கொடுப்பதைக் குறிக்கிறது.
‘மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாதைக் குறிக்கிறது.
‘கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாதைக் குறிக்கிறது.
“இவ்வளவு தான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.
‘இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோம்.
‘நாயும், நரியும், பேயும், கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப்போகிறோம்’ என்று காத்துக்கொண்டிருக்கின்றனவாம்!
நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம் எவ்வளவு வருணனைகள்!
இந்து உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்?
அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.
கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசைதோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.
அதனால் தான் இந்துக்கள், பிற மதத்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.
இந்த உடம்புகளை தவணை முடிந்து விட்டது; அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்று பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.
புதைக்கப்பட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.
எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?
“காதற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.

இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.
தங்களைத் தாங்களே சரிபார்த்துக்கொள்ள நமது தத்துவஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.
“அமீனா வாசலில் நிற்கிறான்.”
“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”
நன்றி :- கவியரசு கண்ணதாசன்