Monday, January 31, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் II - 03



03. வாசலில் அமீனா நிற்கிறான்
தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.
காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.
அதை பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்.
“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”
தமிழர் பதில் சொன்னார்;
“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுப்படுத்திக் கொள்கிறோம். அதன் மூலம் கெட்ட புத்தி விலகிவிடுகிறது.”
ஆங்கிலேயர் திகைத்துப்போனார்.
அன்று முதல் இந்து மதத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினார்.
இன்றும் லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.
"யாக்கை நிலையாமையை" இந்து சமய தத்துவஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.
வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.
விட்டுவிடப் போகுதுயிர்; விட்டவுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்.

-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையைக நடத்துமாறு செய்வதற்கே.
இந்த ஞானம், ஒவ்வொர் சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.
ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும் போது “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.
அதையே மயான வைராக்கியம்’ என்பார்கள்.
“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.
‘பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே. நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே. என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.
இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.
இந்த உடல் இலவசமாக்க் கொடுத்த பரிசு.
தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபக்க் கடிதம்.
‘நீ கையெழுத்துப்போட்ட பாத்திரம் காலாவதியாகிப் போகிறது.
கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.
உன் உயிரை நான் ஜப்தி செய்யப்போகிறேன்.
-என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.
உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.
அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள்.
உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.
சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.
அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச் செய்வது, இந்து சமயவாதிகளின் நோக்கங்களில் ஒன்றாகும்.
எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!
மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ
நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில்
மனைஇருக்கச் சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச் செத்துக் கொட்டக்
கண்டு!
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு
ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே
அலைந்தாயே!
வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை
தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு!
முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!
எத்தனைநாள் கூடி
எடுத்த சரீரம் இவை!
அத்தனையும் மண்தின்ப
தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே?
இருப்பதுபொய் போவது
மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை
யுன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!

-இவை பட்டினத்தார் பாடல்கள்.
காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.
“செத்தாரைப் போலே திரி” என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.
அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப் படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது.
வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.
முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.
இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.
மூன்றாவது சங்கு மரணத்திற்குப்பிறகு ஊதப்படுகிறது.
அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.
சங்கம் என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும், சங்கம்ம் ஆவதையும் குறிக்கும்.
‘முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால்கொடுப்பதைக் குறிக்கிறது.
‘மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாதைக் குறிக்கிறது.
‘கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாதைக் குறிக்கிறது.
“இவ்வளவு தான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.
‘இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோம்.
‘நாயும், நரியும், பேயும், கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப்போகிறோம்’ என்று காத்துக்கொண்டிருக்கின்றனவாம்!
நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம் எவ்வளவு வருணனைகள்!
இந்து உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்?
அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.
கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசைதோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.
அதனால் தான் இந்துக்கள், பிற மதத்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.
இந்த உடம்புகளை தவணை முடிந்து விட்டது; அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்று பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.
புதைக்கப்பட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.
எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?
“காதற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.

இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.
தங்களைத் தாங்களே சரிபார்த்துக்கொள்ள நமது தத்துவஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.
“அமீனா வாசலில் நிற்கிறான்.”
“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”
நன்றி :- கவியரசு கண்ணதாசன்


No comments:

Post a Comment