Friday, December 7, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு!


வணக்கம்

என்னுடைய பதிவுகளில் பல, பல நண்பர்களின் ப்ளாக் மற்றும் இணையத்தில் இருந்து நான் படித்ததில் எனக்கு பிடித்ததை பதிவு செய்தேன். 

இந்த தேடலும் நானும் என்பது என்னுடைய சேமிப்பு கிடங்கு. நான் தேடி படித்ததை மீண்டும் படித்து கொள்ளவே இந்த ப்ளாக்.

ஆனால் இந்த பதிவு கண்டிப்பாக அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்காக....



இந்த ஆய்வை வெளியிட்ட திரு.ராஜ்சிவா அவர்களுக்கு  நன்றிகள்.



இந்த உலகம் 2012 அழியுமா என்ற கேள்விக்கு ராஜ்சிவாவின் பதிலை இந்த தொகுப்பை உங்களுக்கு நான் சமர்பிக்கிறேன்.

மாயன் இனத்தை ராஜ்சிவாவை தவிர வேற யாராளையும் இந்த அளவிற்கு ஆராய்ந்துருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்க்கு அவரின் தொகுப்பு அமைந்துருகிறது. இந்த தொகுப்பு மொத்தம் 225 பக்கங்கள் கொண்டது.

பக்கத்துக்கு பக்கம் அத்தனை தகவல்கள். கொஞ்சம் கூட சலிப்பு தட்டவே முடியாத அளவிற்கு இருக்கிறது  இவரின் தொகுப்பு.







உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்

  • இப்போ உலகமே பயப்படுற குளோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்.
  • உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (ஸ்வல்பர்ட்) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும், கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில் டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது.







Monday, December 3, 2012

ஆதிச்சநல்லூர் - எழுத்தாளர் ஜெயமோகன்



எழுத்தாளர் ஜெய மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை இது. ஆதிச்சநல்லூர் பற்றி கூகுளில் தேடும் போது கிடைத்தது. இக்கட்டுரையை படிக்கும் உங்களுக்கு ஆதிச்சநல்லூர் சென்ற அனுபவம் கிடைக்கும்.


சென்ற மார்ச் பதினொன்றாம் தேதி நானும் யுவன் சந்திரசேகரும் மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஈரோடு நண்பர்கள் தங்கமணியும் கிருஷ்ணனும் நவதிருப்பதிகளுக்குச் சென்றபின் திரும்பும் வழியில் கிருஷ்ணாபுரம் பார்த்துவிட்டு ஆதிச்சநல்லூர் செல்வது என முடிவு செய்தோம். ஆதிச்சநல்லூரைப் பற்றி பொதுவாக நண்பர்களிடையே பெரிய புரிதல் இல்லை. சுருக்கமாக தன் முக்கியத்துவத்தை விளக்கினேன்
ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியில் இருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம். தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. இங்கே தாமிரவருணியின் கரையில் ஒரு மேடு இருந்திருக்கிறது. இந்த மேடு ஒரு இடுகாடு. கிமு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு  ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய பெருங்கலக் காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.
ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு ஆர்வமூட்டும் கதை.  பதினேழாம் நூற்றாண்டு இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும் வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதையல் எடுப்பது ஒரு மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது. இவ்வாறு கண்ட இடங்களில் தோண்டிக்கொண்டிருந்த காலத்தில்  மேய்ச்சல் மக்கள் இந்தக் குன்றில் இருந்து சில  தங்க நகைத்துண்டுகளை தோண்டி எடுத்தனர். பின்னர் இங்கே தேடுதல் வேட்டை  ஆவேசமாக நடந்தது.

புதையல்களை பறி முதல் செய்வதில் ஜரூராக இருந்த பரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு இது சென்றது. அவர்களிடமிருந்து புதைபொருள் ஆய்வாளர்கள் களத்துக்கு வந்தார்கள். 1876ல் பிரிட்டிஷ் ஆய்வாளரான  அலக்ஸாண்டர் ரெயா இங்கே விரிவான தொல்லியலாய்வுகளை நடத்தினார். தென்னிந்தியாவில் இத்தனை பிரம்மாண்டமான தொல்பொருட்குவியல் எங்குமே கிடைத்தது இல்லை. பல்லாயிரம் பொருட்கள் இங்கே கிடைத்தன. மண்பாண்டங்கள், மண்ணினால் ஆன வீட்டுப்பொருட்கள், மண்சிலைகள், வெள்ளி தங்க நகைத்துண்டுகள் இரும்புக்கருவிகள் என அவை பலவகைப்படும்
உண்மையில் இவற்றின் தொன்மையும் அருமையும் அப்போது முழுமையாக உணரப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அன்றைய பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இந்தியப்பெருநிலத்தில் பண்பாடு வெளியில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆரிய இனக்கோட்பாடு ஆய்வாளர்களை முழுமையாகவே கவர்ந்திருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து ஈரான் வழியாக வந்த ஆரியர்களே இந்தியாவில் பண்பாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்ற நம்பிக்கை ஓங்கி இருந்தது. காரணம் ஐரோப்பியர் தங்களை ஆரிய இனமாக எண்ணி ஆரிய இனமே பண்பாட்டின் ஊற்று என நம்பினர்
ஆதிச்சநல்லூர் சான்றாதாரங்கள் இந்தக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானவை. அவை மிகத்தொன்மையான ஒரு பண்பாட்டை காட்டின என்பதோடல்லாமல் அந்தப்பண்பாடு மிக வளர்ச்சி கொண்டிருந்தது என்பதையும் காட்டின. அங்கே கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துருக்கள் இருந்தன. பல்வேறு இறைவடிவங்கள் இருந்தன. உலோகப்பொருட்கள் மிகநுண்மையாகச் செய்யப்பட்டிருந்தன



பல்வேறு காலகட்டங்களிலாக இங்கே தொடர்ந்து தொல்லியலாய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன. நாலாயிரம் வருடப்பழமை அவற்றுக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஏறத்தாழ 114 ஏக்கர் சுற்றளவில் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாழிகள் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக மூன்று மண்அடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறைந்தது ஆயிரம் வருடக்காலம் இந்த இடுகாடு பயன்படுத்தப்பட்டிருக்கப் பட்டதன் ஆதாரம்.
இங்குள்ள உலோகப்பொருட்களும் மண்பாண்டங்களின் உற்பத்தியில் உள்ள நேர்த்தியும் அவற்றில் உள்ள எழுத்துக்களும்தான் ஆய்வாளர்கள் மத்தியில் மிகச்சிக்கலான கேள்விகளை எழுப்பி இன்றுவரை தீராத விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் ஆதிச்சநல்லூர் சிந்துசமவெளி நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கக் கூடும் என்கிறார்கள். இத்தகைய உயர்தரமான உலோகப்பொருட்கள்  இங்கே புழக்கத்தில் இருந்தன என்பதைப் பார்க்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தைவிட மேலான ஒரு பண்பாடு இங்கே இருந்திருக்கலாம் என்கிறார்கள்



மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாக கண்டறிந்துள்ளார்கள். அன்றாடப்புழக்கத்துக்கான மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களைக் காணும்போது அக்காலத்தில் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்றும் அது ஒரு நாகரீக சமூகம் என்றும் ஊகிக்கிறார்கள்.
ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும் அவை சீராக முன்னெடுக்கபப்டவில்லை என்பதும் ஆதிச்சநல்லூர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பதும் உண்மை. வரலாறு எப்போதுமே சமகால வரலார்றுஎழுத்தின் தேவைக்கு ஏற்பத்தான் ஆய்வுசெய்யப்படுகிறது. டாக்டர் சத்யார்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரில் மேலும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கி இன்றைய கவனம் அதன் மீது உருவாக வழிவகுத்தவர். 2004 முதல் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றின் காலக்கணிப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தையும் பிரமிக்கத்தக்க முறையில் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.
ஆதிச்ச நல்லூருக்கு நாங்கள் நல்ல மதிய வெயிலில் சென்று சேர்ந்தோம். அந்த பெரிய செம்மண்பாறைக் குன்றைச் சென்றடைந்ததும் அங்குமிங்கும் பார்த்தோம். தொல்பொருள்துறையின் அறிவிப்போ வேறு அடையாளங்களோ ஏதும் இல்லை. தடுமாறிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய கல்மண்டபத்தில் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டோம். வண்டியை நிறுத்தி அவர்களிடம் ஆதிச்சநல்லூர் இதுதானா என்று கேட்டோம்
அதில் ஒரு கிழவர் எழுந்துவந்தார். ஆடுமேய்ப்பவர் என்பதை அவர் வைத்திருந்த வளைந்த அரிவாள்நுனி கொண்ட துரட்டியாலேயே சொல்ல முடிந்தது. தலையில் ஒரு துண்டு. தொடைக்குமேல் கட்டிய அழுக்கு வேட்டி. டயர் செருப்பு. சட்டை இலலத கரிய உடல் மெலிந்து உறுதியாக வெயில்பட்டு காய்ந்து கரிந்து ஒரு காட்டுச்சுள்ளி போல இருந்தது. தங்கமணி இறங்கிச் சென்று விசாரித்தார்
கிழவர் அருகே வந்து ”இதுதான் எடம்…இதுதான் ஆதிச்சநல்லூர்…ஆனா இங்க ஒண்ணுமே கெடையாது. எல்லாத்தையும் மெட்ராஸ¤க்குக் கொண்டு போயிட்டாங்க… எங்கயோ வச்சிருக்காங்க…ஒண்ணுமே இங்க கெடையாது” என்றார். ஏமாற்றமாக ”சரி எடத்தையாவது காட்டுங்க ”என்றேன்


”எதுக்கு இந்த வெயிலிலே” என்றான் யுவன். நான் ”சரி வந்தாச்சுல்ல?” என்றேன். கிருஷ்ணன் ”ஒண்ணுமில்ல சார், வெப்சைட்டுலே எழுதணுமேன்னு போய் பாக்கலாம்னு சொல்றார்” என்றார். ”நான் அதுக்கும்தான், என்ன இப்ப?” என்று இறங்கினேன். கிருஷ்ணனும் பிறரும் கூட்வே வந்தார்கள்.
அங்கே குழிதோண்டியெடுத்த பொருட்களைக் கொண்டுசென்றபின் குழிகளையும் சுத்தமாக மூடிவிட்டார்கள்.  மூடிய  குழிகள் மேலே நடந்தோம் ”இங்கதான் இந்திய நாகரீகமே உருவாகியிருக்கு…மறைக்கிறானுங்க” என்றார் சிதம்பரம். சரிதான் இன்னொரு உள்ளூர் வளவள  என்று எண்ணிய கிருஷ்ணன் சற்றே கடுப்பாகி ”ஆமாமா, உலக நாகரீகமே இங்கதான்”என்றார்.  நான் கிருஷ்ணனின் கையைப்பிடித்து அழுத்தி சும்மா இருக்கச் சொன்னேன். ஏனென்றால் நாகரீகம் என்ற சொல்லை அத்தனை சாதாரணமாக ஒரு கிராமவாசி சொல்ல மாட்டார் என்று தோன்றியது
கிழவர் என்னிடம் ”இதிலே தமிழ் ஆசிரியர் யாராவது உண்டா?”என்றார். இல்லை என்றேன். அவர் பெருமூச்சு விட்டு ”பாத்திஹள்ல? எப்டி போட்டுவச்சிருக்கானுக? ஒரு குறிப்பு உண்டா? ஒரு அடையாளம் உண்டா? எடுத்த பொருட்களை அங்கங்க தொல்பொருள்துறை ஆபீஸ்களிலே  பிரிச்சு பதுக்கி வச்சிருக்காங்க. என்ன செஞ்சிருக்கணும், இங்க ஒரு மியூசியம் கட்டியிருக்க வேண்டாமா? இங்க எல்லாத்தையும் வச்சு வேணுங்கிறவன் இங்க வந்து ஆராய்ச்சி செய்யச் சொல்லணும். அப்பதான் இந்த எடத்தோட முக்கியத்துவம் தெரியும். இது எப்பேற்பட்ட எடம் இதோட வரலாறு என்ன எல்லாம் வெளியே தெரியும்….இப்ப ஆதிச்சநல்லூர்னா யாருக்குத் தெரியும்? நான் ஜனாதிபதிக்கு எழுதினேன். கவர்னருக்குஎழுதினேன். கலைஞருக்கு எத்தனையோ மனு கொடுத்திருக்கேன். யாருக்கு அக்கறை? ஒண்ணுமே நடக்கலை”
கிருஷ்ணன் பிரமித்துப் போய்விட்டார். கிழவர் சரசரவென பேசிக்கொண்டே போனார் ”இதுதான் இந்தியாவிலேயே பழமையான தொல்பொருள் எடம். இங்கதான் இந்தியாவிலேயே வளார்ச்சிஅடைஞ்ச நாகரீகமும் கண்டுபிடிச்சிருக்காங்க…இன்னும் முழுசா கண்டுபிடிக்கலை…கண்டுபிடிச்சிட்டே இருக்காங்க…எழுத்துக்களை இப்பதான் கண்டுபிடிக்கிறாங்க…ஏய், தாழிகளிலே நெல்லும் உமியும் இருந்ததே அது என்ன எனம் நெல்லுன்னு கண்டுபிடிச்சியா நீ? அந்த நகையில எப்டி செம்பையும் தங்கத்தையும் கலந்தான்னு கண்டுபிடிச்சியா நீ? இல்ல. இதுவரைக்கும் ஒரு நல்ல ஆராய்ச்சி நடக்கலை…”
”ஏன்? ஏன்னா நாகரீகம்னா அது வடக்கேன்னு வெள்ளைக்காரன் சொல்லிட்டான். அவனுக்கு மூக்கு நீளமான ஈரானிலே இருந்து பண்பாடு வந்ததுன்னு சொல்ல ஆசை. அதுக்கு சிந்து சமவெளி நாகரீகத்தை உசத்திப்பிடிக்கணும்….அப்பவே ஆதிச்சநல்லூரைக் கண்டுபிடிச்சாச்சு. எத்தனை அறிஞர்கள் பேசியிருக்காங்க? பேசலை. அப்டியே விட்டுட்டாங்க. நம்மாளுகளும்  அதுக்குமேலே பேசலை. அம்பதுவருடம் ஆதிச்சநல்லூரைப்பத்தி பேச்சே கெடையாது ஐயா…வெளங்குமா? நாடா இது?  வெள்ளைக்காரனுக்கு கறுப்பன்னா எளக்காரம் இங்க வந்து பனங்கொட்டை மூஞ்சுற நம்ம பயக்களை போட்டோ பிடிச்சு பேப்பரிலே போட்டு எல்லாரும் ஆதிவாசிகள் இங்க நாகரீகமே கெடையாதுன்னுட்டான். உண்மையா ஒருத்தன் ஆராய்ச்சி செஞ்சா அவனுக்கு தெரியும் ஆதிச்சநல்லூரோட எடம் என்னன்னு…இப்ப வருது…இப்ப ஒண்ணொண்ணா சில ஆய்வுகள்லாம் வருது…அப்டி புதைச்சு வச்சிட முடியாது…”
எனக்கும் அது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஆதிச்சநல்லூரில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் வைக்கக் கூடாது? ஒரு நிரந்தர தொல்பொருள் மையம் இங்கே உண்டு என்றே எண்ணியிருந்தேன். அந்த மகத்தான தொல்பொருள் புதைபூமி இப்படி கைவிடப்பட்டு திறந்து கிடப்பதை எண்ணவே ஆச்சரியமாக இருந்தது. ஆதிச்சநல்லூர் தொல்பொருட்களை ஏன் பல்வேறு இடங்களிலாக பிரித்து வைக்கவேண்டும். அவை ஆய்வாளர்களுக்கு உரியவை, சரி. ஆனால் அவை மக்கள் பார்வைக்கும் உரியவை அல்லவா? அவை மாபெரும் குறியீடுகள் அல்லவா? ஒரு சமூகம் தன் வேர்களை உணரும் ஆன்மீகமான பேரனுபவத்தை அளிக்க வல்லவை அல்லவா? குறைந்தபட்சம் ஆதிச்சநல்லூரில் அந்த அரும்பொருட்கள் எங்கே உள்ளன என்றாவது ஒரு குறிப்பு இருக்கலாமே? 
கிழவர் பேசிக்கொண்டே போனார். ”ஆரியன் திராவிடன் ஒண்ணும் கெடையாது. எல்லாம் இங்கேருந்து போனவங்க தான்… இதுதான் பூர்வீக நெலம். இந்த தாமிரவருணி மண்ணு… எத்தனை ஆயிரம் வருஷம் முன்னாடி… மொகஞ்சதாரோ ஹரப்பா எல்லாம் இங்கேருந்து போனவங்க உண்டுபண்ணின விஷயங்கள்.  இந்தியாவிலே உளல் எல்லா சிந்தனைகளும் இங்கேருந்து மேலே போனதுதான்…இதைச் சொல்ல இன்னைக்கு ஆளில்லை…” நான் சீண்டுவதற்காக ”ஆனா ஆதிச்சநல்லூர்னுதானே பேரு? ஆதித்தன்னா வடமொழியாச்சே” என்றேன்
”ஆதித்த நல்லூர்னு எவன் சொன்னான்?”என்று கிழவர் நின்றுவிட்டார். ”…இந்த ஊருக்குப்பேரு ஆதி எச்ச நல்லூர்…இது எத்தனையோ காலமா சுடுகாடா இருந்திருக்கு. இந்த எடம் சுடுகாடா ஆனதுக்கு அந்தக்காலத்திலே ஏதோ காரணம் இருந்திருக்கு…தேடிக்கொண்டுவந்து புதைச்சிருக்காங்க…ஏன்னு தெரியல்லை” கிழவர் கோபமானார் ”ஆதித்தன்னு பேரு வச்சுகிட்டவன் சோழன்…பாண்டியனுக்கு அந்தபேரு கெடையாது. ஏன்னா சோழர்கள் சுத்த தமிழர்களே கெடையாது. வெங்கிநாட்டுலேருந்து வந்தவனுங்க. ஆதித்தன்னு எங்க சொல்லியிருக்கு தமிழிலே? ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்னுதானே இளங்கோ சொல்றார்?”
நான் ”ஆதின்னாலும் வடமொழிதானே?”என்றேன். ”என்னய்யா? ஆதிங்கிற வடமொழிச்சொல்லுக்கு எங்க வேர் இருக்கு? சொல்லுங்கய்யா…ஆதிங்கிற சொல்லு சுத்தமான தமிழ்ச்சொல்லு. அதுங்கிற வேர்தான் ஆதியாகியிருக்கு. அதை வடமொழிக்காரன் எடுத்துகிட்டான். அவன் மொழியே முக்காவாசி சொற்களை அங்க இங்க இருந்து பொறுக்கி எடுத்துக்கிடுறதுதான்…” அதற்குமேல் நான் அவரிடம் பேச ஒன்றுமில்லை. அவர் சொன்னது உண்மை. ”நம்ம வரலாறுக்கு எத்தனையோ ஆழம் இருக்கு தம்பி …நீங்கள்லாம் படிச்சுப்பாக்கணும். சிலப்பதிகாரத்திலே சொல்லியிருக்கு ப·றுளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள அப்டீன்னு…நம்ம வேரு எங்கியோ கெடக்கு”
கிழவர் ஒரு உடைந்த ஓட்டுக்குவியலைக் காட்டினார். ”இதெல்லாம் மண்பாண்டக்குவியல் உடைஞ்சது. சும்மா வந்துகிட்டே இருக்கு…” கறுப்பு ஓடுகள் சிவப்பு ஓடுகள் கறுப்பும் சிவப்பும் கலந்த ஓடுகள். மிக மெல்லியவை,ஆனால் மிக உறுதியானவை ”அந்தக்ககாலத்திலே இலுப்பை எண்ணையைப்போட்டு களிமண்ணை பெசைஞ்சு பானை வனைஞ்சாங்க. அந்த இலுப்பை எண்ணைதான் கறுப்பா ஆகியிருக்கு…”என்றார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணில் நின்று அந்த கலத்தூண்டுகளை எடுத்துப் பார்ப்பது மனக்கிளர்ச்சி ஊட்டும் அனுபவமாக இருந்தது. என்றோ ஒருநாள் ஆதிச்சநல்லூரின் பாடங்கள் மேலும் துல்லியமாகப் படிக்கப்படலாம். அப்போது நம் வரலாறு முழுமையுடன் மேலெழுந்து வரலாம். ”அப்ப நான் கெளம்புறேன்…”என்றார் கிழவர்
”அய்யா பேரு என்னங்க?” என்றேன் ”சிதம்பரம்…” என்றார். ”என்ன பண்றீங்க?”என்றான் யுவன் ”பாத்தா தெரியலை, மாடுமேய்க்கிரது. நமக்கு அந்தப்பக்கமா கொஞ்சம் நெலம் உண்டு. வெவசாயம். ஸ்கூலுக்குப் போகலை. அண்ணாவைத்தான் படிகக் வச்சாங்க. எல்லாம் நானே வாசிச்சு படிச்சுகிட்டதுதான்” ”இப்பவும் படிக்கிறீங்களா?”என்றார் கிருஷ்னன் ”நாளைக்கும் படிப்பேன்”என்றார் சிதம்பரம் ஆணித்தரமாக. ”அப்ப நான் வாரேன்” கும்பிட்டு கெளம்பினார்
”சார் தலையிலே கடப்பாரையாலே அடிச்சது மாதிரி இருந்தது”என்றார் கிருஷ்ணன் ”ஆனா எனக்கு ரொம்ப தேவையான அடிதான்” என்றார். யுவன் சந்திரசேகர் ”என்னய்யா இது கதையிலே இருந்து எந்திரிச்சு வாரதுமாதிரி வந்திட்டார்…  சொன்னா நம்பவே மாட்டாங்க…”என்றார் .”அவரு நம்மளை ஒரு பொருட்டாகவே நெனைக்கலை பாத்தியா? அவருக்கு நம்ம கிட்ட பேசுறதிலே ஆர்வமே கெடையாது. நாம வழி கேட்டப்ப பேசாமத்தான் இருந்தார். கட்டாயப்படுத்தி தங்கமனி கூப்பிடப்பதான் வந்தார்…”
அங்கிருந்து திரும்பும்போது எண்ணிக்கொண்டேன் , ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் இன்னும் எத்தனையோ தொல்மூதாதையர் உறங்கிக்கொண்டிருக்கலாம். நம் ஞானம் இன்னும் சென்று தீண்டாத ஆழத்தில். சிதம்பரம் வாயிலிருந்துகோண்டு அவர்கள்தான் பேசியிருக்கிறார்கள்.



Source: http://www.jeyamohan.in/?p=2143


ஆதிச்சநல்லூர் தாழி..!



தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!

அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்சநல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்சநல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.


"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

நன்றி: தமிழ்ச்சாரல்